சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘கூலி’ படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்-2’ படம் உருவாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து, ரஜினியின் 173-வது படத்தை கமல்ஹாசன் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. இப்படம், ஜாலியான கலகலப்பான படமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.
ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் 2027-ம்ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் படத்தை வெளியிடும் என்றும் ராஜ் கமல் பிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதற்கிடையே, இந்தப் படத்திலிருந்து விலகுவதாக, சுந்தர்.சி திடீரென அறிவித்தார். கதை பிரச்சினை காரணமாக அவர் விலகியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், ரஜினிக்கு பிடித்த கதையைத் தான் எடுப்போம் என்றும் ரஜினியின் படத்தை இயக்க புதிய இயக்குநர்களுக்கும் வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார்.
முன்னதாக ரஜினி படத்தை வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்பராஜ் இயக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் ரஜினியின் 173-வது படத்தை தனுஷ் இயக்க இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.
வருகிற 28-ந்தேதி தனுஷ் நடிப்பில் ‘தேரே இஷ்க் மெய்ன்’ படம் வெளியாகவுள்ளது. முன்னதாக ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், இட்லி கடை ஆகிய படங்களை தனுஷ் இயக்கியுள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.