சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்ற ரோபோ சங்கர், அண்மையில் ‘அம்பி’ என்ற படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகமானார். இந்நிலையில், அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவினால் காலமானார். இந்நிகழ்வு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியது. இச்சூழலில், இன்று நடிகர் அபிநய் மறைவும் திரை வட்டாரத்தில் சோகம் சூழ்ந்துள்ளது.
தனுஷ் நடிப்பில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர், அபிநய். அதனைத்தொடர்ந்து ஜங்ஷன், சிங்காரச் சென்னை, பொன்மேகலை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘துப்பாக்கி’ படத்தில் வில்லனுக்கு அபிநய்தான் குரல் கொடுத்திருந்தார்.
ஒருகட்டத்தில் படவாய்ப்புகள் இல்லாமல் போக, வருமானத்துக்கு கஷ்டப்பட்டார். சமீப காலமாக கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அபிநய், சிகிச்சைக்கு பணமின்றி தவித்து வந்தார். அவருக்கு, கேபிஒய். பாலா, தனுஷ் உள்ளிட்டோர் மருத்துவச் செலவிற்கு பணம் கொடுத்து உதவி செய்தனர்.
இந்நிலையில், கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அபிநய் இன்று அதிகாலை காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.