ரஜினியின் ‘தலைவர்-173’ படத்தில் தனுஷ்?: ரசிகர்கள் எதிர்பார்ப்பு..
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தில் தான் நடித்திருப்பதை உறுதி செய்துவிட்டார் விஜய் சேதுபதி. ரஜினிக்கு வில்லனாக நடித்திருக்கிறாரோ அவர் என பேசப்பட்ட நிலையில் கவுரவத் தோற்றத்தில் வருவதாக கூறியிருக்கிறார். பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி வில்லனாக நடிக்கிறார் என கூறப்படுகிறது.
விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் குறித்து தெரிய வந்ததும் ரசிகர்களுக்கு தனுஷ் நினைவு வந்திருக்கிறது. தன் தலைவர் படத்தில் ஒரு காட்சியிலாவது வந்துவிட வேண்டும் என்று பல ஆண்டுகளாக ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறார் தனுஷ். ரஜினிக்கு மருமகனாக இருந்தபோதே கவுரவத் தோற்றத்தில் நடிக்க முயற்சி செய்து முடியாமல் போனது.
இருந்தாலும், தலைவர் ரஜினியுடன் சேர்ந்து ஒரு ஃபிரேமிலாவது வர வேண்டும் என்கிற தன் ஆசையை அவர் வெளிப்படுத்துவதை நிறுத்தவில்லை. இந்நிலையில், கவுரவத் தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்திருப்பதால் அந்த வாய்ப்பு தனுஷுக்கு மட்டும் ஏன் கிடைக்காமல் இருக்கிறது என தனுஷ் ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தற்போது தலைவர் 173 படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்கவிருக்கிறார். ஏப்ரல் மாதம் ஷூட்டிங் துவங்கும் என தெரிவித்தார் ரஜினிகாந்த். இச்சூழலில் ரஜினியுடன் சேர்ந்து நடிக்க தனுஷுக்கு இப்படத்திலாவது வாய்ப்பு கிடைக்குமா எனவும் கேட்டு வருகின்றனர்.
தற்போது போர்த்தொழில் படத்தை இயக்கி வரவேற்பு பெற்ற விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்த படத்தில் “கரசாமி” எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். என் பெயர் கரசாமி, என்னை எல்லோரும் கரனு கூப்பிடுவாங்க என டீஸரில் தனுஷ் பேசிய வசனம் பிரபலமாகி உள்ளது. இப்படம் தனுஷுக்கு முக்கியமானதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
