லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூர்யாவுக்கு பதிலாக அல்லு அர்ஜுன்..
சூர்யா நடிப்பில் ‘இரும்புக்கை மாயாவி’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், சில காரணங்களால் ‘இரும்புக் கை மாயாவி’ படத்தை இயக்குவதற்கு சூழல் அமையாமல் போனது.
இந்நிலையில், இதே ஸ்கிரிப்ட்டை வைத்து அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்கள் இடையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது
1962-ம் ஆண்டு வெளியான ‘The Steel Claw’ டிசி காமிக்ஸ் நாவலை அடிப்படையாக கொண்டது ‘இரும்புக் கை மாயாவி’ கதை. விபத்து ஒன்றில் தன்னுடைய ஒரு கையை இழந்தவருக்கு, செயற்கை கை பொருத்தப்படுகிறது. பின்னர் ஏற்படும் சில சம்பவங்களால் எதிர்பாராத அதீத சக்தியை பெறுகிறார்.
இந்த கருவை மையமாக வைத்து ‘இரும்புக்கை மாயாவி’ படமாக்கப்பட உள்ளது. இதில், லோகேஷ் படங்களில் வழக்கமாக இடம்பெறும் கேங்க்ஸ்டர் காட்சிகள் இடம்பெறாது என கூறப்படுகிறது. இதனால் அவருடைய ஸ்டைலில் இப்படம் மாறுபட்ட ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையில், அல்லு அர்ஜுன் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படம் உருவாகி வருகிறது. சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தின் ஷுட்டிங் அடுத்தாண்டு இறுதிவரை நடைபெறும் என கூறப்படுகிறது. இப்படத்தை தொடர்ந்து லோகேஷ்- அல்லு அர்ஜுன் கூட்டணி உருவாகும் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

