மதத்தின் பெயரால், பிறரை காயப்படுத்தக் கூடாது: ஏ.ஆர்.ரகுமான் பேச்சு..

ஏழு தேசிய விருதுகள் மற்றும் இரண்டு ஆஸ்கர் விருதுகளும் வென்று உலக அளவில் புகழ் பெற்று திகழ்கிறார் ஏ.ஆர்.ரகுமான். இவரது இயற்பெயர் திலீப்குமார் ஆகும். அவரும், அவரது குடும்பத்தினரும் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்ட பிறகு, அவர் தனது பெயரை அல்லாஹ் ரக்கா ரகுமான் என மாற்றிக்கொண்டார்.
மேலும், சூபி தத்துவம் மீது அதிக ஈடுபாடு கொண்டவரான அவர், ‘ராக்ஸ்டார்’. ‘ஜோதா அக்பர்’ உள்பட பல படங்களில் சூபி இசையை பயன்படுத்தி பாடல்களை உருவாக்கியுள்ளார். இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமானிடம் மதம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர்,
‘நான் அனைத்து மதங்களின் ரசிகன். இந்து, கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் குறித்து நிறைய ஆராய்ந்துள்ளேன். மதத்தின் பெயரால் மற்றவர்களை கொல்வது, காயப்படுத்துவது தவறானது. நான் மக்களை மகிழ்விக்க விரும்புகிறேன். இசை நிகழ்ச்சி நடத்தும்போது, அந்த இடத்தை புனித தலம் போல் உணர்கிறேன்.
மக்கள் வெவ்வேறு மதங்களை பின்பற்றினாலும், வெவ்வேறு மொழிகளை பேசினாலும் நம்பிக்கை தூய்மையானதாக இருக்க வேண்டும். ஆன்மிக ரீதியில் செல்வ செழிப்புடன் இருக்கும்வரை இலக்குகளை நம்மால் அடைய முடியும். சூபி தத்துவம் என்பது நாம் இறப்பதற்கு முன்பே இறப்பது போன்றது. அதில் உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்வதற்கான திரைகள் உள்ளன.
அந்த திரைகளை அகற்ற நீங்கள் அழிய வேண்டும். காமம், பேராசை, பொறாமை, தீர்ப்பளிக்கும் மனப்பான்மை ஆகிய அனைத்தும் இறக்க வேண்டும். உங்கள் அகங்காரம் போய்விடும். பின்னர் நீங்கள் கடவுளைப் போல் வெளிப்படையானவர் ஆகிவிடுவீர்கள்’ என கூறியுள்ளார். தற்போது இது வைரலாகி வருகிறது.

