‘ரஜினி-173’ படத்திலிருந்து சுந்தர்.சி விலகல் ஏன்?: கமல்ஹாசன் விளக்கம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு ’தலைவர் 173’ படத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து கனத்த இதயத்துடன் விலகுவதாக சுந்தர்.சி உருக்கமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது. எதனால் விலகினார் என்பதற்கான காரணம் தெரியாமலேயே இருந்தது. மேலும், இணையத்தில் பலரும் பல்வேறு காரணங்களை குறிப்பிட்டார்கள்.
இதனிடையே டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார் கமல்ஹாசன். ரஜினியின் 173-வது படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் என்பதால், அவரிடம் அந்த படத்தின் நிலை குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கமல்,
‘ரஜினி படத்திலிருந்து விலகியதற்கான காரணத்தை சுந்தர்.சி அறிக்கையாக வெளியிட்டுவிட்டார். அது அவருடைய கருத்து. நான் முதலீட்டாளன், எனது நட்சத்திரத்துக்கு பிடித்த கதையை எடுப்பது தான் எனக்கு ஆரோக்கியமானது. அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம்.
ரஜினிக்கு பிடிக்கும்வரை கதைகள் கேட்டுக் கொண்டே இருப்போம். கதை நன்றாக இருக்க வேண்டும் அவ்வளவு தான். புதிய அறிவிப்பு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எதிர்பாருங்கள்’ என்று பதிலளித்தார்.
ரஜினியுடன் இணைந்து நடிக்கவுள்ள படம் குறித்த கேள்விக்கு, ‘அதற்கும் கதைகள் கேட்டு வருகிறோம். எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என தனக்கே உரிய பாணியில் பதிலளித்தார் கமல்ஹாசன்.

