இந்தியாவே எங்களைப் பார்த்து பெருமைப்படும்: மகேஷ்பாபு நெகிழ்ச்சி..
இந்திய அளவில் புகழ்பெற்ற பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படம் ‘வாரணாசி’. இப்படத்துக்காக ‘குளோப் டிரோட்டர்’ என்ற சாகச உலகத்தைப் படக்குழு உருவாக்கியுள்ளது. இதற்கான விழாவை ஹைதராபாத்தில் ஏற்பாடு செய்தது படக்குழு.
இந்த நிகழ்வில் படத்தின் தலைப்பையும் அது தொடர்பான அறிமுக டீசரையும் படக்குழு வெளியிட்டது. இதில் மகேஷ் பாபு பேசும்போது,
‘இந்தப் படம் என்னுடைய கனவு. இது வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு. இந்த படத்தின் மூலம் நான் அனைவரையும் பெருமைப்படுத்துவேன். மிக முக்கியமாக என்னுடைய இயக்குநரை அதிகம் பெருமைப்படுத்துவேன். ‘வாரணாசி’ படம் ரிலீஸ் ஆனதும் ஒட்டுமொத்த இந்தியாவும் எங்களைப் பார்த்து பெருமைப்படும்” என தெரிவித்தார்.
இந்த படத்தில் ‘ருத்ரா’ என்ற கதாபாத்திரத்தில் மகேஷ் பாபு நடிக்கிறார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிமுக டீசரில் காளை ஒன்றின் மீது மகேஷ் பாபு, கையில் திரிசூலத்தை ஏந்தி வருவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. தற்போது இந்தக் காட்சி செம வைரலாகி வருகிறது.

