Kalaimamani Awards :
சென்னை: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் பல்வேறு கலைப்பிரிவுகளின் கீழ் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை 8 ஆண்டுகளாக கலைமாமணி விருது வழங்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் அதற்கான விருது வழங்கும் விழா நேற்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.
தமிழக அரசு சார்பில், கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை கலைமாமணி விருது வழங்கும் விழா நடைபெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில், கலைமாமணி விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் சபாநாயகர் ப.தனபால் தலைமை தாங்கினார் மற்றும் தலைமைச்செயலாளர் க.சண்முகம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர்-செயலாளர் வீ.தங்கபாலு அறிக்கை வாசித்தார். இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விழா மலரை வெளியிட்டார்.
விழாவில் கலைஞர்களுக்கு ‘கலைமாமணி’ விருது, தங்கப்பதக்கம், சான்றிதழ் மற்றும் அகில இந்திய விருதாளர்களுக்கு சான்றிதழ், காசோலை, பொற்கிழி, கேடயம் ஆகியவற்றை எடப்பாடி பழனிசாமி வழங்கி கலைஞர்களை கவுரவித்தார்.
201 பிரபலங்களுக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு – யாரெல்லாம் இருக்கிறார்கள் தெரியுமா?
விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘பொதுமக்களை மகிழ்விக்கும் கலைஞர்கள் எப்போதும் தங்கள் வாழ்வில் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில்,
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலங்களில் பல்வேறு நலத்திட்டங்களையும், விருதுகளையும் அறிவித்து, அவர்களை ஊக்கப்படுத்தி வந்தார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.
இயல், இசை, நாடகம், நாட்டியம், திரைப்படம், சின்னத்திரை, கிராமியக் கலை மற்றும் இதர கலைத் துறைகளில் சிறந்து விளங்கும் 201 கலைஞர்களுக்கு “கலைமாமணி” விருது வழங்கியதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இதில் 72 வகையிலான கலைப் பிரிவுகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன’ இவ்வாறு பேசினார்.
மேலும் கலைஞர் பெருமக்கள் தங்களது சில கோரிக்கைகளை தெரிவித்துள்ளனர். அதனை கலைமாமணி விருது வழங்கும் போது, அந்த கோரிக்கைகளை நிறைவேற்றி தரவேண்டும் என்று அன்புடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர். எனவே அவர்களின் வேண்டுகோளை ஏற்று அதிமுக சார்பில் சில அறிவிப்புகளை வெளியிட விரும்புகிறேன்.
அவர் கூறியதாவது, “கலைமாமணி விருது 3 பவுனுக்கு பதிலாக இனி 5 பவுன், அதாவது 40 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கங்களாக வழங்கப்படும்.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் இனி, ஜெயலலிதா பெயரில் 3 சிறப்பு கலைமாமணி விருதுகள் வழங்கப்படும். மேலும் நலிந்த மூத்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.2000 இருந்து ரூ.3000 உயர்த்தி வழங்கப்படும்”. இவ்வாறு கூறினார்.