பேருந்து கட்டணங்கள் விமான டிக்கெட் அளவுக்கு இருக்கு! – இயக்குநர் பேரரசு

தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் பேருந்து கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்படுவதற்கு இயக்குநர் பேரரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அனைத்து நாட்களிலும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு ஒரே சீரான கட்டணத்தை அரசு நிர்ணயிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து இயக்குநர் பேரரசு கூறுகையில், “தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் பேருந்து கட்டணமாக ரூ.3,000, ரூ.4,000 என வசூலித்தால் எப்படி? சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களில் பெரும்பாலானோர் அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்.

குடும்பத்துடன் சொந்த ஊருக்குச் சென்று திரும்புவதற்கே பல ஆயிரம் ரூபாய் செலவாகிவிடுகிறது. பேருந்து என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கான போக்குவரத்து என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
அவரவர் விருப்பத்திற்கு கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்றால் அது எப்படி மக்களாட்சியாகும்? இந்த நடைமுறையிலும் மாற்றம் கொண்டு வர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
