சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘கூலி’ திரைப்படத்தை தொடர்ந்து ‘ஜெயிலர்-2’ படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் முதல் துவங்கும் என கூறப்படுகிறது. இது பற்றிய அறிவிப்பு இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியிடப்படும் என்றும் சொல்லப்படுகின்றது.
இந்நிலையில், சௌந்தர்யா ரஜினிகாந்த், ரஜினி-கமல் படம் குறித்து பேசியிருக்கிறார். அப்போது கமலின் மகள் ஸ்ருதிஹாசனும் உடனிருந்தார். அப்போது சௌந்தர்யாவிடம் ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்கப்போகும் படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சௌந்தர்யா,
‘கமல்சாரோட தயாரிப்பில் அப்பா ஒரு படம் பண்ண போகிறார். இப்போது அந்த படத்தின் வேலைகள் போய்க்கொண்டு இருக்கின்றது. இதைப்பற்றி அவர்கள் இருவரும் சொன்னால் தான் சரியாக இருக்கும். இந்த படம் குறித்து தலைவர் சொல்லவேண்டிய நேரத்தில் கரெக்ட்டா சொல்வார்’ என தெரிவித்துள்ளார் சௌந்தர்யா.
இதன்மூலம் ரஜினி மற்றும் கமல் கூட்டணியில் ஒரு படம் உருவாகப்போவது மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்படத்தை கமல்ஹாசன், தனது ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாகவே தயாரிக்க இருப்பது சௌந்தர்யா கூறியதன் மூலம் தெரிய வந்துள்ளது. ஆனால், இயக்குநர் யார் என்பது கேள்வியாக உள்ளது.
முதலில் லோகேஷ் கனகராஜ் ரஜினி-கமல் இணையும் படத்தை இயக்கப் போகின்றார் என சொல்லப்பட்டது. ஆனால், அதன் பிறகு வேறொரு இயக்குநர் இயக்கவுள்ளார் என செய்திகள் வந்தது. தற்போது ரஜினிகாந்த் பல இயக்குநர்களிடம் கதை கேட்டு வருவதாக சொல்லப்படுகின்றது. பெரிய இயக்குநராக மட்டுமல்லாமல், அதற்கு ஏற்றவாறு கதை இருக்க வேண்டும் என்பதில் மிக தெளிவாகவும் உறுதியாகவும் ரஜினி-கமல் இருவரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.