சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகவா லாரன்ஸ்

நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசிய கருத்து தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தவறான புரிதல்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் நான் கூறிய கருத்து தொடர்பாக ஏற்பட்டுள்ள தவறான புரிதலை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

நான் எப்போதும் எனது ரசிகர்களையும் பொதுமக்களையும் என் தாய்க்கு நிகராக மதித்து வந்துள்ளேன். ஆனால், நான் மக்களை நாய்களுடன் ஒப்பிட்டுப் பேசியதாக சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதும், நான் கூறிய கருத்தின் தவறான விளக்கமுமாகும்.

நான் கூறியதன் உண்மையான பொருள் என்னவென்றால், ஒருவர் புதிய வீட்டிற்கு அல்லது புதிய சூழலுக்கு செல்லும்போது அங்குள்ள மக்களையும், சுற்றுப்புறத்தையும், வாழ்க்கை முறையையும் புரிந்துகொண்டு அதனுடன் ஒன்றிப் பழக சிறிது காலம் தேவைப்படும் என்பதுதான். அதற்கு எடுத்துக்காட்டாக அப்பகுதியில் உள்ள நாய்களின் பழக்கவழக்கங்களை குறிப்பிட்டே பேசினேன்.

நான் மதிக்கும் மக்களை, என் தாய்க்கு இணையாகக் கருதும் மக்களை, நாய்களுடன் ஒப்பிட்டுப் பேசும் அளவிற்கு மனமில்லாதவன் அல்ல. எந்த இடத்திலும் மக்களை குறிப்பிட்டு அவ்வாறு பேசவில்லை. புதிய சூழலுடன் பழகுவதற்கு கால அவகாசம் தேவைப்படும் என்பதையே நான் வலியுறுத்தினேன்.

எனவே, சமூக வலைதளங்களில் பரவி வரும் குறும்படக் காட்சிகளை மட்டும் நம்பாமல், அனைவரும் முழு காணொளியையும் பார்த்து நான் உண்மையில் என்ன கூறினேன் என்பதை சரியாகப் புரிந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

எனக்கு தொடர்ந்து ஆதரவும் அன்பும் வழங்கி வரும் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

raghava lawrenceRaghava Lawrence Puts an End to the Controversy with Official Clarificationராகவா லாரன்ஸ்