விஜய்யின் ’ஜனநாயகன்’ படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தில், பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ்ராஜ், பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் ஜனவரி 9-ந்தேதி திரைக்கு வரவுள்ளது.
இது விஜய்யின் கடைசிப் படமாகும். அதன்பின் அவர் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். இதனால், அவரது ரசிகர்கள் கவலையில் உள்ளனர். இச்சூழலில் ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் விஜய் மறைமுகமாக அரசியல் பேசினார். அவர் தெரிவிக்கையில்,
‘என்னுடைய ரசிகர்கள் ஒருநாள், இரண்டு நாள் இல்லைங்க. கிட்டத்தட்ட 33 வருஷங்களுக்கு மேல என்கூடவே நின்னு இருக்காங்க. அதனால், அடுத்த 30, 33 வருஷங்களுக்கு அவங்ககூட நான் நிற்க முடிவு பண்ணியிருக்கேன். எனக்கு ஒண்ணுனா ரசிகர்கள் தியேட்டரில் நிற்குறாங்க. நாளை அவர்களுக்கு அவங்க வீட்டுல போய் நிற்க முடிவு பண்ணியிருக்கேன்.
எனக்காக எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்த என் ரசிகர்களுக்காக, நான் சினிமாவையே விட்டுக் கொடுத்திருக்கிறேன். இந்த விஜய் ரசிகர்களுக்காகவே நான் சினிமாவில் இருந்து விலகுகிறேன். இந்த விஜய் சும்மா நன்றின்னு சொல்லிட்டு போறவன் கிடையாது. நன்றிக்கடன் தீர்த்துவிட்டுதான் போவேன்’ என பேசினார்.
இந்நிலையில், விஜய் சினிமாவைவிட்டு விலகுவது குறித்த கேள்விக்கு நடிகர் கருணாஸ் பேசுகையில், ‘சினிமா ஒன்றும் அழிந்து விடாது, என்னை போன்ற பலரை வளர்த்து விட்ட சினிமா தான். அது அப்படியேதான் இருக்கும். யாருக்காகவும் காத்திருக்காது’ என கூறியுள்ளார்.