விக்னேஷ் ராஜா இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கர’ திரைப்படம் நாளை (ஏப்ரல் 30) உலகம் முழுவதும் வெளியாகிறது. இப்படத்திற்குப் போதிய விளம்பரங்கள் இல்லை என்றும், முன்பதிவு மந்தமாக இருப்பதாகவும் இணையத்தில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜின் பாராட்டுப் பதிவு படக்குழுவினருக்குப் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.
மாரி செல்வராஜ் பகிர்ந்த நெகிழ்ச்சியான பதிவு:
இப்படத்தை முன் கூட்டியே பார்த்த இயக்குநர் மாரி செல்வராஜ், தனது எக்ஸ் (X) தளத்தில் படத்தைப் பாராட்டிப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:
“இப்போதுதான் ‘கர’ பார்த்து முடித்தேன். சரியான சொற்களில் சொல்ல வேண்டுமென்றால் மிகச் சிறந்த திரை அனுபவத்தை, திரை சிலிர்ப்பை, திரை நெகிழ்வை, திரை சிந்தனையை, திரை விறுவிறுப்பை எனக்குள் தூண்டிவிட்ட ஒரு நம்பிக்கையான படமாக இருந்தது.”
தனுஷின் நடிப்பு குறித்து:
தனுஷின் நடிப்பு குறித்துப் பேசிய மாரி செல்வராஜ், “நேற்று பார்த்து உலுக்கிய ஒடிசாவின் ஜித்து முண்டாவின் முகத்தை இன்று திரையில் கரசாமியாக நெஞ்சுக்குள் கொண்டு வந்து உசுப்பிய தனுஷ் சார் அவர்களுக்கு அவ்வளவு நன்றியையும் அன்பையும் சொல்லத் தோன்றுகிறது. ‘கர’ கொண்டாடப்படும்!” எனத் தெரிவித்துள்ளார்.
விளம்பரங்கள் குறித்த கவலையில் இருந்த ரசிகர்களுக்கு, மாரி செல்வராஜின் இந்த பாசிட்டிவ் விமர்சனம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.