மும்பையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், நடிகை கஜோல் மராத்தியிலும் பிறகு ஆங்கிலத்திலும் பேசினார். அவரிடம் நிருபர் ஒருவர் இந்தியில் பேசுமாறு கூறினார்.
இதனால், கோபமடைந்த கஜோல், ‘நான் இந்தியில் பேச வேண்டுமா? யாருக்கு புரியவேண்டுமோ அவர்களுக்கு புரியும்’ என்று கடுமையான தொனியில் கூறினார். இந்த வீடியோ வலைதளங்களில் உடனடியாக வைரலானது.
கஜோலுக்கு ஆதரவாக ஒரு தரப்பும், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்னொரு தரப்பும் பதிவிட்டு வருகின்றனர். ‘இந்தி வேண்டாம் என்று நினைப்பவர் இத்தனை வருடங்கள் எதற்காக இந்தி படங்களில் நடித்தார்?’ என இணையத்தில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. அதேபோல ‘பேரும் புகழும் சம்பாதிக்கும் வரை இந்தி வேண்டும், இப்போது அது தேவைப்படவில்லையா?’ எனவும் விமர்சித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக மஹாராஷ்டிராவில் மராத்தி பேசுபவர்களுக்கும், இந்தி பேசும் மக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் நிகழ்ந்து வந்தன. இந்தச் சூழலில் இந்தி மொழி குறித்த கஜோலின் இந்த கருத்து கவனிக்கத்தக்கது.
தற்போது ’சார்ஜமீன்’ என்ற படத்தில் கஜோல் நடித்துள்ளார். இதில் அவருடன் மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாறன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாக வெளியானது.