துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான ‘லோகா’ திரைப்படம் வரவேற்பை பெற்றது தெரிந்ததே. இந்நிலையில், இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘காந்தா’ என்ற படத்தின் டிரெய்லர் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, ராணா, பாக்யஸ்ரீ போஸ் உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘காந்தா’ படம் வருகிற 14-ந்தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், ‘காந்தா’ படம் குறித்து சல்மான் சல்மான் தெரிவிக்கையில்,
‘இக்கதையை 2019-ல் தான் கேட்டேன். தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இப்படத்தின் இயக்குநர் செல்வா இருப்பார். சினிமாவை அவ்வளவு ரசிப்பார். இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசையாக காத்திருந்தேன். எங்கள் எல்லோருக்கும் தமிழில் மிக முக்கியமான படமாக ‘காந்தா’இருக்கும்.
‘அய்யா’ கதாபாத்திரத்திற்கு மிகப்பொருத்தமான நபராக சமுத்திரக்கனி இருந்தார். எங்களை விட இன்னும் அதிக ஆர்வமாக சமுத்திரக்கனி இந்தப் படத்தில் நடித்துக் கொடுத்தார். அவருடன் இணைந்து இன்னும் நிறைய படங்கள் நடிக்க வேண்டும்.
குமாரி கதாபாத்திரத்திற்காக தமிழ் கற்றுக் கொண்டு முழு ஈடுபாட்டோடு பாக்யஸ்ரீ நடித்திருக்கிறார். ராணாவும் நானும் இணைந்து இந்தப் படம் செய்திருப்பது மகிழ்ச்சி. படம் நன்றாக வர வேண்டும் என்று ராணா முழு உழைப்பைக் கொடுப்பார்.
டைம் டிராவல் செய்வது போன்ற மகிழ்ச்சியை இந்த பீரியட் படங்கள் கொடுக்கும். அதை கலை இயக்குநர் ராமலிங்கம் சிறப்பாக செய்திருக்கிறார். மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களும் இந்தப் படத்திற்கு சிறப்பாக உழைத்துள்ளனர். படம் பார்க்கும் அனைவருக்கும் இது மறக்க முடியாத படமாக இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.