மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க வந்து 8 ஆண்டுகளாகி விட்டது. அவரின் ஒவ்வொரு படம் ரிலீஸாகும் போதும் அதை பார்த்துவிட்டு ஸ்ரீதேவி போல ஜான்வியால் வர முடியாது. ஸ்ரீதேவி மகளுக்கு அவர் போன்று அழகும் இல்லை, நடிப்புத் திறமையும் இல்லை என விமர்சிப்பது வாடிக்கையாகி விட்டது.
இது எல்லாம் ஜான்வி கபூருக்கு தெரியாமல் இல்லை. ஆனால், அந்த விமர்சனங்களை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அம்மாவை பெருமை அடையச் செய்ய முயற்சிக்கிறார். அவரின் தங்கை குஷி கபூரையும் நடிக்கத் தெரியவில்லை என விமர்சிக்கிறார்கள்.
ஜான்வியை விட குஷி கபூர் ரொம்ப தைரியசாலி. அவரை இந்த நெகட்டிவ் விமர்சனங்கள் பாதிப்பதில்லை. நீங்கள் குறை சொல்வதை சொல்லிக் கொண்டே இருங்கள், நான் படங்களில் தொடர்ந்து நடிக்கிறேன் என இருக்கிறார்.
இந்நிலையில் ‘சன்னி சன்ஸ்கரி கி துள்சி குமாரி’ என்கிற படத்தில் நடித்திருக்கிறார் ஜான்வி கபூர். அந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக செய்தியாளர்களை சந்தித்தது படக்குழு. ஸ்ரீதேவி அளவுக்கு நடிக்க முயற்சி செய்வது குறித்து ஜான்வியிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஜான்வி கபூர் கூறியதாவது,
‘அம்மா அளவுக்கு என்னால் வர முடியாது. அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் 300 படங்களில் நடித்துவிட்டார். என் அம்மா நான்கு வயதில் நடிக்க ஆரம்பித்தார். அவரின் அளவுக்கு வர முயற்சி செய்வது கூட ரொம்ப ரொம்ப கடினம். என் படங்கள் மூலம் ரசிகர்களை மகிழ்விப்பதுடன் என் பெற்றோரை பெருமை அடையச் செய்ய முயற்சி செய்து வருகிறேன். அவ்வளவு தான். என் அம்மாவின் பெயரை காப்பாற்றுவேன் என்று நினைக்கிறேன்’ என்றார்.