சூர்யா 46’ படத்தின் கதைக்களம் என்ன என்பது பற்றிப் பார்ப்போம்..
ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் ‘கருப்பு’ படத்தின் பணிகளை முடித்துவிட்டு, வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிவுற்றது.
தற்போது சூர்யா – ஜோதிகா இருவரும் கிழக்கு ஆப்பிரிக்காவில் சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் திரும்பியவுடன் மீண்டும் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதனிடையே ‘சூர்யா 46’ படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் வெங்கி அட்லுரி தெரிவிக்கையில்,
‘முதலில் ஒருவருடைய வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி கதையொன்றை இயக்கதான் முடிவு செய்தேன். ஆனால், சூர்யா சார் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க ஆர்வமாக இல்லை. அதுமட்டுமன்றி, அதன் உரிமைகள் வாங்குவதும் தாமதமாகிக் கொண்டே இருந்தது.
பின்பு, அவருக்கு குடும்பத்தை மையப்படுத்தி கதையொன்றை கூறினேன். அதனை கேட்டவுடனே மிகவும் பிடித்திருப்பதாக சொன்னார். அந்தச் சமயத்தில் அதன் கிளைமாக்ஸ் காட்சி என்னவென்று கூற முடிவு செய்யவில்லை. நீண்ட நாட்களுக்குப் பின் மனித உணர்வுகளைக் கொண்ட ஒரு மகிழ்ச்சியான குடும்ப படமாக இது இருக்கும். சஞ்சய் ராமசாமி போன்றதொரு கதாபாத்திரத்தில் சூர்யா சாரை காண்பீர்கள்’ என தெரிவித்துள்ளார்.
நாக வம்சி தயாரித்து வரும் ‘சூர்யா 46’ படத்தில் மமிதா பைஜு நாயகியாக நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளர். அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு இப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது. அவ்வகையில், சூர்யா-46′ படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.