பகல்காம் பயங்கரவாதம் குறித்து, அஜித்குமார் தெரிவித்த தகவல்கள் காண்போம்..
பகல்காம் தாக்குதல் சம்பவத்திற்கு திரைப் பிரபலங்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில், டெல்லியில் பத்ம பூஷன் விருது வாங்கிய அஜித் குமார் தெரிவிக்கையில்,
‘இது போன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது. மக்கள் ஒருவருக்கொருவர் அனுதாபம் காட்ட வேண்டும். பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் எனது இரங்கல்கள். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது என நான் பிரார்த்திக்கிறேன்.
அரசாங்கம், தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது என்று நான் நம்புகிறேன். காலப்போக்கில், நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் அனுதாபம் காட்ட கற்றுக்கொள்வோம், நமது வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து, அமைதியான சமூகமாக வாழ்வோம் என்று நான் நம்புகிறேன்’ என்றார். மேலும், நாட்டைப் பாதுகாக்க அயராது உழைக்கும் ஆயுதப் படைகளின் துணிச்சலையும் தியாகங்களையும் அஜித் பாராட்டினார்.
‘நானும் ஆயுதப் படைகளைச் சேர்ந்த பலரைச் சந்தித்தேன். அவர்களின் தியாகங்களுக்கு நாம் அனைவரும் அவர்களைப் பாராட்டுகிறோம் என்பதை அவர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். நாம் அமைதியாக உறங்கும் பொருட்டு அவர்கள் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள்.
அவர்கள் நமது எல்லைகளைப் பாதுகாக்க அயராது உழைக்கிறார்கள். குறைந்தபட்சம் அவர்களின் நினைவாக, நமது நாட்டிற்குள், ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்தவும், ஒவ்வொரு மதத்தையும் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். இந்தியாவிற்குள் நாம் சண்டையிடக்கூடாது. நாம் ஒன்றுபட்ட அமைதியான சமூகமாக இருக்க வேண்டும், எனவும் அஜித் கூறினார்.