தமிழ்த்திரையில், ‘திரைக்கதை மன்னர்’ கே.பாக்ராஜிடம் பணிபுரிந்த பின்.. பார்த்திபன் ஹீரோவாக நடித்து இயக்கிய படம் ‘புதிய பாதை’. இப்படம் கோலிவுட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி மெகா ஹிட் ஆனது. படத்தில் பார்த்திபனுக்கு ஜோடியாக சீதா நடித்திருந்தார்.
பின்னர், இருவருக்கிடையே காதல் மலர்ந்து கல்யாணமும் இனிதாய் நடைபெற்றது. அபிநயா, கீர்த்தனா என இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ராக்கி என்ற தத்தெடுத்த மகனும் உள்ளனர்.
இந்நிலையில், பார்த்திபனுக்கும் சீதாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்று சுமூகமாக பிரிந்தனர்.
திருமணத்திற்கு பின் சீதாவிற்கு சினிமா வாய்ப்பு கிடைக்காததால், சீரியலில் நடித்து வந்தார். அப்போது, தன்னுடன் இணைந்து நடித்த சீரியல் நடிகர் சதீஷ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து பேசிய சதீஷ், சீதாவும் நானும் நல்ல நண்பர்கள் என கூறியிருந்தார்.
தற்போது இணையத்தில் மிக ஆக்டிவாக இருக்கும் சீதா, தன்னுடைய தோட்டத்தில் வளர்ந்த காய்கறிகள் குறித்தும், சமையல் செய்வது குறித்தும் அவ்வப்போது வீடியோ வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், நடிகை சீதா தற்போது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வீட்டில் நகை காணாமல் போய் உள்ளதாக புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், தன்னுடைய வீட்டில் வைக்கப்பட்டிருந்த அனைத்து நகைகளும் இருக்கும்போது, 2 1/2 சவரன் ஜிமிக்கியை மட்டும் காணவில்லை என புகாரில் கூறியுள்ளார்.
இதையடுத்து, சீதா அளித்துள்ள புகாரின் அடிப்படையில், வீட்டில் வேலை செய்பவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் திருடு போனது. புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றதில், வீட்டு வேலைக்காரி சிக்கியது குறிப்பிடத்தக்கது.