தி கிராண்ட் மாஸ்டர் கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

V6 Film Pvt Ltd சார்பில் வேலாயுதம் தயாரிப்பில், வெற்றிச்செழியன் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘தி கிராண்ட் மாஸ்டர்’. மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.
முன்னணி இயக்குநர்களான ஹெச். வினோத், சீனு ராமசாமி மற்றும் ஜனநாதன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய வெற்றிச்செழியன், தனது முதல் படத்திலேயே விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையையும், அவர்களின் கனவுகளுக்கான போராட்டத்தையும் மையமாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளார்.
தூய்மை பணியாளராக வாழ்வாதாரத்திற்காக போராடும் ஒரு தாய், தனது மகன் செஸ் விளையாட்டில் சாதித்து கிராண்ட் மாஸ்டர் ஆக வேண்டும் என்ற கனவுக்கு துணை நிற்கிறார். வறுமை மற்றும் சமூகத் தடைகளைத் தாண்டி மகனின் கனவை நனவாக்க அந்தத் தாய் மேற்கொள்ளும் போராட்டமே படத்தின் மையக்கதையாக அமைந்துள்ளது.
தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக்கில், சதுரங்கக் காய்கள் நிறைந்த பின்னணியில் தாயும் மகனும் வெவ்வேறு உணர்வுகளுடன் இடம்பெற்றுள்ளனர். செஸ் காயை கையில் ஏந்தியபடி சிறுவன் நம்பிக்கையுடன் மேல்நோக்கிப் பார்க்க, மறுபுறம் தாய் கவலையும் வலியும் கலந்த பார்வையுடன் காட்சியளிக்கிறார். மேலும், தாய் தனது மகனுடன் சைக்கிளில் பயணிக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.

இப்படத்தில் அபர்ணதி, லிங்கேஷ், சுரேஷ் மேனன், அஸ்வின், தமிழரசி, அன்பு, மனோ மதுரை, விசித்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அர்ஜுன் ரவி – ஞானசேகர் ஆர்.எஸ். இணைந்து ஒளிப்பதிவு செய்ய, தினேஷ் ஆண்டனி இசையமைக்கிறார். ரஞ்சீத் சி.கே. படத்தொகுப்பையும், ராகவன் சஞ்சீவி கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர்.
திண்டுக்கல், மதுரை, தடா மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
