சென்னை : தமிழகத்தின் 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி இன்று உதயமாக உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சி இன்று புதிய மாவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு, 2 வருவாய் கோட்டங்கள், 6 வருவாய் வட்டங்கள், மூன்று காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகங்கள், 3 மாவட்ட கல்வி அலுவலகங்கள், 6 சட்டசபை தொகுதிகள் மற்றும் ஒரு மக்களவை தொகுதியுடன் இன்று புதிய மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமாக உள்ளது. கடந்த ஜனவரி மாதம் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சி பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிட்டத்தக்கது.
மேலும் புதிய மாவட்டமாக கள்ளக்குறிச்சி – ஐ அறிமுகம் செய்யும், துவக்க விழா இன்று நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய மாவட்டமான கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் செயல்பாட்டை தொடங்கி வைக்கிறார்.
அதை தொடர்ந்து, சிறப்பு குறைதீர் திட்ட பயனாளிகள் 9,000 மேற்பட்டோருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்க உள்ளார். மேலும் இந்த விழாவில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் சண்முகம், உதயகுமார் உள்ளிட்டோரும் கலந்து கொள்ள உள்ளனர்.
மேலும் வடக்கு மண்டல ஐ.ஜி., நாகராஜ் மேற்பார்வையில் டி.ஐ.ஜி., சந்தோஷ் குமார் தலைமையில் எஸ்.பி.,க்கள் ஜெயச்சந்திரன், அபினவ், மயில்வாகனன், அரவிந்தன், 3 ஏ.டி.எஸ்.பி.,க்கள், 15 டி.எஸ்.பி.,க்கள் உட்பட மொத்தம் ஆயிரத்து 600 போலீசார் இவ்விழாவிற்கு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர்.