Women stop Sabarimala temple – திருவனந்தபுரம்: ‘சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்ற, சென்னையை சேர்ந்த 11 பெண்களை கேரள போலீசார் பம்பையில் தடுத்து நிறுத்தினர்’. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, கேரளாவில் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
மேலும், சட்டப்பேரவை கூட்டத்தை நடத்தவிடாமல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் சட்டபேரவை கூட்டத்தை முடக்கினர். இதன் காரணமாக அங்கு மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில் சபரிமலை கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறந்த கடந்த மாதம் 16-ந்தேதி முதல் போலீசாரின் கெடுபிடியால் பக்தர்களின் கூட்டம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சன்னிதானம், நிலக்கல், பம்பை உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து, அடுத்தடுத்து, 144 உத்தரவை 5 வது முறையாக நீட்டித்து பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
பலத்த சோதனைக்கு பிறகே பக்தர்கள் அனைவரும் சபரிமலையில் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் இருந்து சென்னையை சேர்ந்த 11 பெண்கள், சபரிமலையில் ஐயப்பன் கோயிலுக்கு நேற்று அதிகாலை 3.30 மணியளவில் கம்பம்மேட்டுக்கு சென்றதால், சபரிமலையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது.
மேலும் பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், கேரள போலீசார் அப்பெண்களை பாதுகாப்பாக தமிழகத்துக்கு திருப்பி அனுப்பினர்.
இந்த பெண்களில் 6 பேர் கருப்பு உடையணிந்து, இருமுடி கட்டி கோயிலுக்கு செல்ல முயன்றது குறிப்பிடத்தக்கது.