Thanga Tamilselvan : மதுரை: திமுகவுடன் அமமுக இணைந்து அதிமுக ஆட்சியை கலைப்போம் என்று அமமுகவைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் கருத்து தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியதாவது:
“ஆட்சியை கலைக்க அமமுகவுக்கு திமுக ஆதரவு தர வேண்டும், இல்லையெனில் திமுக பயந்ததாக அர்த்தம்” என சர்ச்சைக்குரிய கருத்தை பேசினார்.
3 எம்எல்ஏ-க்களுக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ்க்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பது சரியான தீர்ப்பு. உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளதால் சபாநாயகர், கொறடா சட்டப்படி சிக்கி உள்ளனர்.
ஏற்கனவே 18 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியபோது இது போன்ற உத்தரவு வந்திருந்தால் தமிழக அமைச்சர்கள் சிறைக்கு சென்றிருப்பார்கள், இனி என்ன செய்தாலும் பழனிசாமி ஆட்சியை தொடர முடியாது என அவர் தெரிவித்தார்.
பின்னர் வாக்கு எண்ணிக்கையான வருகிற 23-ஆம் தேதிக்கு பிறகு பழனிசாமி அவர்கள் வீட்டுக்கு புறப்பட வேண்டியது தான். மத்தியில் பாஜ வெற்றி பெற்றாலும், அதிமுகவுக்கு பலவீனமாகவே இருக்கும் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சர் பழனிசாமி எப்படி பிரச்சாரம் செய்தாலும், திருப்பரங்குன்றத்தில் அதிமுக டெபாசிட் இழப்பது உறுதி.
மேலும் ஜெயலலிதா மரணத்தின் மர்மம், பொள்ளாச்சி, கொடநாடு விவகாரம் போன்றவை அமமுக ஆட்சிக்கு வந்ததும் விசாரணை நடத்துவோம் என்று தங்க தமிழ்ச்செல்வன் பேட்டியில் கூறியிருந்தார்.