Plastic Products :
சென்னை: பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜனவரி 1ம் தேதி முதல் தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று கூறி சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் ஆவின் பாலை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்வதற்குப் பதிலாக அவற்றை பாட்டில்கள் மூலமாக விற்பனை செய்வது போன்ற மாற்று ஏற்பாடுகளை செய்ய அரசுக்கு உத்தரவிடுகிறோம் என்று தெரிவித்துள்ளது.
தமிழக அரசு கடந்த ஜூன் 25ம் தேதி, மறு சுழற்சி செய்ய முடியாத 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்கள்,
விற்பனையாளர்கள் என பல்வேறு அமைப்புகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள், நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பிளாஸ்டிக்குக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும், மாநில அரசுக்கு அதிகாரமில்லை எனவும் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கில் மத்திய சுற்றுச்சூழல், வனத்துறையையும், மத்திய ரசாயன துறையையும் எதிர்மனுதாரர்களாக சேர்த்து உத்தரவிட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்கள், குறிப்பாக பாலிபுரோப்பிலீன் பைகள் பிளாஸ்டிக் தடவப்பட்ட 14 வகையான பொருட்களுக்கு தடை விதித்து 2018 ஜூன் 25ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த உத்தரவு 2019 ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த உத்தரவு தங்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்றும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர்கள் முறையிட்டுள்ளனர்.
தாங்கள் தயாரிக்கும் பிளாஸ்டிக் பைகள் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யக் கூடியவை. இந்த பிளாஸ்டிக் பைகளால்
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லை.
சுற்றுச்சூழலுக்கு உட்பட்டே நாங்கள் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கிறோம், ஆனால் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்காமல், மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களுக்கு தடை விதித்துள்ளது சட்டவிரோதமானது.
இதில் பாரபட்சம் காட்டப்பட்டு சர்வதேச நிறுவனங்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசின் உத்தரவு உள்ளது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் வாதிடுகையில், தடை உத்தரவு பிறப்பிப்பதற்கு 6 மாதங்களுக்கு முன்பாகவே ஊடகங்கள் வாயிலாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது., ஆனால் மனுதாரர்களுக்கு உரிய மாற்று ஏற்பாடுகளுக்கான வாய்ப்பு தரவில்லை என கூறுவதை ஏற்க முடியாது என்றார்.
மேலும் இந்த உத்தரவு மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது எனக்கூறுவதை ஏற்க முடியாது.
அரசு திட்டங்களுக்காக நில ஆர்ஜிதம் செய்யும்போது நிலஉரிமையாளர்கள் தங்களின் அடிப்படை உரிமை பாதிக்கப்படுகிறது எனக்கூறினால் தேசத்தின் வளர்ச்சியை எப்படி எட்ட முடியும்? என கேள்வி எழுப்பினார்.
பொதுமக்களின் நலன் கருதியே அரசு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை மற்றும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஆவின் பாலை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்வதற்குப் பதிலாக அவற்றை பாட்டில்கள் மூலமாக விற்பனை செய்வது போன்ற மாற்று ஏற்பாடுகளை செய்ய அரசுக்கு உத்தரவிடுகிறோம்,
மறுசுழற்சி செய்ய முடியாத அனைத்து பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதித்தால்தான் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையின் நோக்கம் நிறைவேறும்.
பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணி மற்றும் சணல் பைகளை தயாரித்து பயன்படுத்த வேண்டும்.
இந்திய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார் பாண்டியா !
அறிவியல் ஆய்வின் அடிப்படையில் பிளாஸ்டிக் பொருட்கள் நிலத்தில் மக்க 100 ஆண்டுகள் ஆகும் என தெரியவந்துள்ளது.
விலங்கினங்கள் பிளாஸ்டிக் பொருட்களை தவறுதலாக சாப்பிடுவதால் உயிரிழப்பு ஏற்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்கள் அன்றாட வாழ்வில் கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவி சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
எனவே பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை உத்தரவை கண்டிப்பான முறையில் அமல்படுத்த வேண்டும்,
இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு சரியானது தான் என்பதால் இதுதொடர்பாக மனுதாரர்கள் தாக்கல் செய்துள்ள அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்கிறோம். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.