விஜய்க்கு ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன்: பவன் கல்யாண் அறிவுறுத்தல்..
நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு, பவன் கல்யாண் கூறியுள்ள தகவல் காண்போம்..
ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் தெரிவிக்கையில், ‘விஜய் மிகவும் அனுபவம் வாய்ந்தவர் அவருக்கு ஆலோசனை எதுவும் தேவையில்லை. ஆனால், அவருக்கு ஒரு விஷயம் மட்டும் சொல்ல விரும்புகிறேன்.
அரசியலில் நிலைத்து இருங்கள். என்ன நடந்தாலும் மக்களோடு இருங்கள். அரசியல் ரொம்ப கஷ்டமானது. அதில், எதற்கும் தயாராக இருக்கனும். வெற்றி என்பது பின்னர் போகப் போக வரும். முதலில் கட்சியை வலுப்படுத்துவது தான் முக்கியம்.
அரசியலுக்கு வந்துவிட்டால் பல தியாகங்கள் செய்ய வேண்டியிருக்கும். தனிப்பட்ட வாழ்க்கை என்பது இருக்காது. தொடர்ந்து உங்களை விமர்சிப்பார்கள். எல்லோருக்கும் எதிரியாக மாற நேரிடும்.
ஒவ்வொரு நடிகருக்கும் சரி, ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் சரி ஒரு தனிப்பட்ட பாணி இருக்கும். எனக்கு எனது பாணி ஒர்க் அவுட் ஆனது. அது எல்லாருக்கும் சரிப்பட்டு வருமா என தெரியவில்லை’ என கூறியுள்ளார்.
அதேபோல் பகுதி நேர நடிகராகவும், பகுதி நேர அரசியல்வாதியாகவும் இருப்பதாக தன் மீது வைக்கப்படும் விமர்சனத்திற்கும் பதிலளித்துள்ள பவன் கல்யாண், ‘எனக்கு பணம் தேவைப்படும் வரை நடிப்பேன். அதே நேரத்தில் என்னுடைய அரசியல் நடவடிக்கைகளில் எந்தவித சமரசமும் இருக்காது’ என உறுதிபட கூறியுள்ளார்.
பவன் கல்யாண் நடிப்பில் தற்போது ஓஜி, ஹரி ஹர வீர மல்லு, உஸ்தாத் பகத் சிங் போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
