மருத்துவர்கள் பணிக்கு திரும்பவில்லை எனில் அவர்களின் பணியிடங்கள் காலியிடமாக அறிவிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
ஊதிய உயர்வு, பதவி உயர்வு, மருத்துவ மேற்படிப்புகளில் இட இதுக்கீடு, நோயாளிகளின் எண்ணிக்கை ஏற்ப மருத்துவ பணியிடங்களை உயர்த்துவது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் கடந்த 6 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று உண்ணாவிரத போரட்டத்தையும் துவங்கியுள்ளனர்.
இந்நிலையில், மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதோடு, பணிக்கு திரும்பாத மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுகப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் இன்று காலை பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ‘ஏழைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. அமைச்சர் அறிவித்த படி பணிக்கு திரும்பாத மருத்துவர்களின் பணியிடங்கள் காலியிடமாக அறிவிக்கப்படும்’ என அவர் எச்சரித்துள்ளார்.