MK Stalin Condemned – சென்னை: நடிகை நயன்தாரா குறித்து நடிகர் ராதாரவி பேசிய சர்ச்சை பேச்சுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ராதாரவி பேசும்போது, “நயன்தாரா ஒரு பக்கம் பேயாகவும் நடிக்கிறார்.
இன்னொரு பக்கம் சீதாவாகவும் நடிக்கிறார். முன்பெல்லாம் சாமி வேஷம் போட வேண்டும் என்றால் கே.ஆர்.விஜயாவை தான் தேடுவார்கள்.
ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம், பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம்” என இழிவாக நயன் குறித்து பேசியுள்ளார். இது அனைவரிடத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ராதாரவியின் இந்த சர்ச்சை பேச்சுக்கு நயன்தாராவின் காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் உட்பட பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து விக்னேஷ் சிவன் கூறும்போது, ‘ஒரு பாரம்பரியமான குடும்பத்திலிருந்து வந்தவர் பேசிய அருவருப்பான இத கருத்துகளுக்கு எதிராக யார் நடவடிக்கை எடுப்பார்களோ? யார் எனது கண்டன குரலுக்கு ஆதரவு கொடுப்பார்களோ? மூளையற்ற நபர், தன் மீதான கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக இதனை செய்கிறார்.
இதில் வேதனை அளிப்பது அவருடைய கீழ்தரமான இந்த கருத்தை அங்கிருந்தவர்கள் கைத்தட்டி, சிரித்து கேட்பது வேதனையளிக்கும் விஷயம். இப்படி ஒரு நிகழ்ச்சி, முடிவுறாத ஒரு படத்துக்காக நடக்கிறது என்று எங்கள் யாருக்கும் தெரியாது.
மேலும், என்ன நடந்தாலும் அவர் மீது நடிகர் சங்கத்தை சேர்ந்தவர்களோ அல்லது வேறு எந்த சங்கத்தைச் சேர்ந்தவர்களோ நடவடிக்கை எடுக்கப்போவதில்லை..
இவ்வாறு தனது கோவத்தை டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின், “பெண்ணுரிமை முன்னிறுத்தும் திமுகவில் அங்கம் வகிக்கும் நடிகர் ராதாரவி அவர்களின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் மீது கூறிய இந்த கருத்து கடும் கண்டனத்திற்குரியது” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.