Krishnam Movie : கேரளாவில் நடந்த உண்மைச் சம்பவம் ‘கிருஷ்ணம் ‘ என்கிறபெயரில் பக்திப் படமாகிவுள்ளது.
கேரளாவில் உள்ள ஒரு கோடீஸ்வரருக்கு மூன்று பிள்ளைகள். அந்தக் குடும்பமே கிருஷ்ண பக்தர்கள் கொண்ட குடும்பம்.
நன்றாகப் போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் ஒரு நாள் புயலடித்தது. கோடீஸ்வரரின் 3வது பையனுக்கு இதயத்தில் ஒரு நோய். Chronic Constrictive Pericarditis என்பது நோயின் பெயர்.
அது 10 லட்சம் பேரில் ஒருவருக்கு மட்டுமே வரும் நோய். மருத்துவம் உண்டா என்றால் உண்டுதான்.
ஆனால் அறுவை சிகிச்சைக்கு நீண்ட நேரம் பிடிக்கும் .இச்சிகிச்சையில் பிழைக்கும் வாய்ப்பும் குறைவுதான். இருந்தாலும் குடும்பத்தினர் குருவாயூர் கிருஷ்ணனைப் பிரார்த்தனை செய்தனர், கிருஷ்ணனை நம்பினர்.
கேரளாவின் பிரபல டாக்டர் சுனில் தலைமையில் அமெரிக்காவிலிருந்து வரவழைக்கப்பட்ட 2 டாக்டர்கள் துணையுடன் அறுவைச் சிகிச்சைக்குத் தயாரானது மருத்துவக் குழு. என்ன கொடுமை! அந்த நேரத்தில் டாக்டர் சுனிலுக்கு திடீரென்று மயக்கம் வந்தது மருத்துவ குழு அதிர்ச்சிக்குள்ளானது.
நல்ல வேளை சுனில் அரை மணி நேரத்தில் தெளிந்து எழுந்தார். ஒரு வழியாக வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சையும் முடிந்தது. குடும்பத்தினர் கிருஷ்ணனைப் பிரார்த்தனை செய்தது வீண் போகவில்லை. எல்லாம் நல்லபடியாக முடிந்தது.
அறுவை சிகிச்சை நடந்து முடிந்த போது குருவாயூரிலிருந்து ஓர் இளைஞன் மருத்துவமனைக்கு வந்து விசாரித்தானாம். அதே போல வீட்டுக்கும் வந்து நலம் விசாரித்தானாம்.
பிறகு குருவாயூர் போய் விசாரித்த போது அப்படி யாரும் அங்கிருந்து அனுப்பப்படவில்லை என்றார்களாம்.
அதேபோல் ஹாஸ்பிடலில் இருக்கும்போது குருவாயூரிலிருந்து போன் வந்திருக்கிறது. பிறகு குருவாயூர் போய் விசாரித்த போது அப்படி யாரும் பேசவில்லை என்றார்களாம்.
சாட்சாத் கிருஷ்ணன் தான் அந்த போன் பேசியது. சாட்சாத் அந்தக் குருவாயூர் கிருஷ்ணன் தான் அந்த இளைஞனாக வந்தது என்று நம்புகிறார்கள்.
இந்த அற்புதத்தை உணர்ந்த குடும்பம் இந்த அனுபவத்தை உலகுக்குக் காட்ட எண்ணியிருக்கிறது.
இக்கதையைத் திரைப்படமாக்க விரும்பியிருக்கிறது. முடிவும் ஆகிவிட்டது. வேலைகள் தொடங்கி மளமளவென படப்பிடிப்பையும் முடித்துவிட்டார்கள். தமிழ்,மலையாள மொழிகளில் படம் தயாராகியுள்ளது.
நோயில் பிழைத்த அதே மகன் அக்ஷய் கிருஷ்ணனை நாயகனாக நடிக்க வைத்துள்ளனர். நாயகியாக ஐஸ்வர்யா உல்லாஸ் நடித்துள்ளார்.
சாய்குமார், சாந்தி கிருஷ்ணா, விஜய் பாபு ,வினீத், ராஜீவ் பணிக்கர், ஜெயகுமார், அஞ்சலி உபாசனா ஆகியோரும் நடிக்க படம் உருவாகியிருக்கிறது. இப்படத்தில் நிஜ வாழ்வில் நடந்த குருவாயூர் கிருஷ்ணனின் அற்புதங்கள் இடம் பெறுகின்றன.
கதையைத் தயாரிப்பாளர் பி.என்.பலராம் எழுதியுள்ளார். திரைக்கதை வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து படத்தை இயக்கியிருப்பவர் தினேஷ் பாபு , இசை – ஹரிபிரசாத் , கலை இயக்கம் – போபன், படத்தொகுப்பு – அபிலாஷ் பாலசந்திரன் .
ஆக்ஷன் ரியாக்ஷன் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலமாக PNB சினிமாஸ் தமிழகம் முழுவதும் இப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ளது.