கமலின் 237-வது படத்தில் பணிபுரியும் தொழில்நுட்பக் கலைஞர்கள்..

கமல்ஹாசனின் ‘237’ திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. சண்டைப்பயிற்சியாளர்களாக கவனம் பெற்ற அன்பறிவ் சகோதரர்கள் இப்படம் மூலம் இயக்குநர்களாக அறிமுகமாகின்றனர். ‘கேஜிஎஃப்’ படத்துக்காக இவர்களுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
முன்னதாக ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ ‘விக்ரம்’, ‘லியோ’, படங்களில் ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணியாற்றிவர்கள் அடுத்து கமலின்‘இந்தியன் 2’, ‘கல்கி’, ‘தக் லைஃப்’ படங்களில் பணியாற்றி உள்ளனர்.
நீண்டநாட்களாக இப்படம் குறித்த அப்டேட் எதுவும் வெளியாகாமல் இருந்த நிலையில், ரசிகர்கள் தொடர்ந்து கமலின் சமூக வலைதள பக்கத்தில் இப்படத்தின் நிலை குறித்து கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில், இப்படத்தில் தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய தகவல்களை ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்துக்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசை அமைக்கிறார். இவர் இதற்கு முன் ‘துருவங்கள் பதினாறு’, ‘போர்த்தொழில்’, ‘நிறங்கள் மூன்று’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். மலையாளத்தில் ‘கிங் ஆஃப் கொத்தா’, ‘அய்யப்பனும் கோஷியும்’, ’துடரும்’ உள்பட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
‘ஆடுஜீவிதம்’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி பாராட்டுகளை பெற்ற சுனில் கே.எஸ். இப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். துல்கர் சல்மான் நடித்த ‘சார்லி’, ‘அங்கமாலி டைரீஸ்’, ‘ஏஆர்எம்’, ‘மார்கோ’, ஷங்கரின் ‘கேம்சேஞ்சர்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ஷமீர் எடிட்டராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இப்படத்தில் அதிகமாக மலையாள சினிமாவைச் சேர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு கமல்ஹாசன் முக்கியத்துவம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், கமலின் 237-வது படம் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகவுள்ளது எனவும் கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
