‘ஜனநாயகன்’ காலைக்காட்சிக்கு அனுமதியில்லை: விஜய் ரசிகர்கள் அதிருப்தி..
மலேசியாவில் நடந்த ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் 75 ஆயிரம் பேர் கலந்து கொண்டார்கள். இதையடுத்து ஒரு தமிழ்ப் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு அதிக அளவில் ஆட்கள் கூடியதாக மலேசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்திருக்கிறது ஜனநாயகன் நிகழ்ச்சி என கூறப்படுகிறது.
இந்நிலையில் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் நாள் முதல் காட்சி 6 மணிக்கு தான் துவங்கும் என அதை கேரளாவில் விநியோகம் செய்திருக்கும் எஸ்.எஸ்.ஆர். என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதிகாலை காட்சி இல்லாமல் போனது கேரள மாநில தளபதி விஜய் ரசிகர்களை அதிருப்தி அடைய செய்திருக்கிறது. ‘ஜனநாயகன்’ எஃப்டிஎஃப்எஸ் பற்றி எஸ்.எஸ்.ஆர். என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் கூறியிருப்பதாவது,
‘கேரளாவில் முதல் நாள் முதல் காட்சியை காலை 4 மணிக்கு திரையிட அனைத்து முயற்சியும் செய்தோம். முதலில் 4 மணி காட்சிக்கு தயாரிப்பாளர் தரப்பில் இருந்து அனுமதி அளித்தார்கள். ஆனால், தற்போதைய சூழல் மற்றும் தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் சில விஷயங்களால் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி கிடைக்கவில்லை.
அதனால் கேரளாவில் காலை 6 மணிக்கே ஜனநாயகன் படம் ரிலீஸாகும். இந்த அசவுகரியத்திற்காக கேரளா தளபதி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் 6 மணிக்கு ஜனநாயகன் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க தவறாதீர்கள் என்று போஸ்டரும் வெளியிட்டுள்ளது எஸ்.எஸ்.ஆர். என்டர்டெயின்மென்ட்ஸ்.
அப்படி என்ன பிரச்சினை தான் வந்தது?. கடைசி நேரத்தில் 4 மணி காட்சிக்கு பதிலாக 6 மணிக்கு ரிலீஸாகும் அளவுக்கு வந்த சிக்கல் என்னவோ என விஜய் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழகத்தில் 9 மணிக்கு ஜனநாயகன் படத்தின் முதல் நாள் முதல் காட்சி திரையிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
