Election 2019 :
சென்னை: தொடர் கருப்பு பணம் பறிமுதல் செய்யப்பட்ட வேலூரில் நாடாளுமன்றத் தேர்தல் ரத்தாகுமா என்பது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ பதில் அளித்துள்ளார்.
வேலூர் காட்பாடியில் உள்ள துரைமுருகன் வீடு மற்றும் அவரது மகனும், வேலூர் எம்பி தொகுதி வேட்பாளருமான கதிர் ஆனந்த் பள்ளி மற்றும் கல்லூரியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது அவர்களது வீட்டில் சுமார், ரூ 10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் துரைமுருகனுக்கு நெருக்கமான திமுக பிரமுகரின் சிமென்ட் குடோனிலும் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட அந்த பணக்கட்டுகளில் தொகுதி எண், வார்டு எண், தெரு பெயர் உள்ளிட்ட விவரங்கள் இருந்தன.
இந்நிலையில் வேலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது தேர்தல் செலவின உதவி அலுவலர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், ‘வேட்புமனுவில் குறிப்பிட்டதை விட வருமான வரி சோதனையில் அதிக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதனால் வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.இந்நிலையில் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே வேலூரில் நாடாளுமன்றத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
அதற்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ , ” இதுகுறித்து முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
வருமான வரித்துறையும் தகவல் கொடுத்து இருக்கிறது. அவற்றை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்புவோம். இந்திய தேர்தல் ஆணையம் தான் இறுதி முடிவு எடுக்கும் ” என்று பதில் அளித்துள்ளார்.