தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு ஒவ்வொரு திரைப்படமும் முடிந்த பிறகு, கோயில் கோயிலாக சென்று வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள மோரனபள்ளியில் ராகு கேது அதர்வன ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா கோயிலில் சாமி தரிசனம் செய்தார். சாமிக்கு தனது கையால் தீபாராதனை காண்பித்தும் வழிபட்டார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் வைரலானது.
ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட யோகிபாபு, கையில் பல நிறங்களில் கயிறும், காப்பும், தாயத்தும் கட்டியிருக்கிறார். ஆனால், படங்களில் அப்படி அவரது கையில் எதுவுமே இருக்காது. கதையின் கேரக்டருக்கு ஏற்ப காட்சி அமைந்திருப்பது அவசியம். அவ்வகையில், ஒரு சில படங்களில் அப்படியே நடித்திருப்பார்.
பொதுவாக, ஆன்மீகப் பற்று கொண்டவர்கள் திருஷ்டி விழாமல் இருக்க கையில், கழுத்தில், காலில் கருப்பு நிற கயிறு கட்டுவார்கள். இது தொன்றுதொட்டு இருந்து வரும் ஒரு பழக்கம் தான். இந்தப் பழக்கம் இன்றைய இளைஞர்களிடமும் இருக்கிறது. ஒரு சிலர் பச்சை, சிகப்பு, மஞ்சள் என்று பல நிறங்களில் இருக்கும் கயிறுகளை தங்களது கையில் கட்டிக் கொள்வார்கள்.
இது குறித்து யோகிபாபு, “இது சாமி விஷயம். மேலும், இது சம்பந்தமில்லாத கேள்வி. நீ இல்ல, நான் இல்ல, நம் முன்னோர்களுக்கு முன் உருவான விஷயம் இது. இதைப் பற்றிப் பேச வேண்டாம்” என்றார் இறைபக்தியுடன்.!