நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், தமிழகத்தில் புதிய அரசை அமைக்க உரிமை கோரி ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
ஆளுநரைச் சந்திக்க அனுமதி கோரியுள்ள அவர், சட்டமன்றத் தவெக குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் முறைப்படி ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், 108 இடங்களில் வென்றுள்ள தவெக, தனது மெஜாரிட்டியை மெய்ப்பிக்க ஆளுநரிடம் இரண்டு வார கால அவகாசம் கோரியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, 59 இடங்களுடன் இரண்டாவது பெரிய கட்சியாக வந்துள்ள திமுக, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ளது. திமுகவின் சட்டமன்றக் குழுத் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. விஜய்யின் அரசியல் வருகை தமிழகத்தின் அரை நூற்றாண்டு கால இருதுருவ அரசியலை மாற்றி அமைத்துள்ள நிலையில், அவரது பதவியேற்பு விழாவை எதிர்நோக்கித் தமிழகமே காத்திருக்கிறது.