ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிக்கவுள்ள ‘தலைவர் 173’ படத்தின் இயக்குநர் யார் என்பது கேள்விக்குறியாகி உள்ளது. தொடர்ந்து, கதை கேட்கும் பணிகளில் ரஜினி ஈடுபட்டுள்ளார். இளம் இயக்குநர்கள் அவரை சந்தித்துக் கதை சொல்லி வருவதாக கூறப்படுகிறது.
‘தலைவர்-173’ படத்திலிருந்து சுந்தர்.சி விலகலுக்கு பிறகு, ரஜினியிடம் ‘மகாராஜா’ படத்தின் இயக்குநர் நித்திலன் கதை சொல்லியுள்ளார். மேலும் ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் கூறிய கதையில் ரஜினி இம்ப்ரஸ் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் ‘தலைவர் 173’ படத்தை ராம்குமார் இயக்குவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஹரிஸ் கல்யாண், எம்.எஸ். பாஸ்கர் நடிப்பில் வெளியான ‘பார்க்கிங்’ வாயிலாக இயக்குநராக அறிமுகமானார் ராம்குமார் பாலகிருஷ்ணன். முதல் படத்திலேயே கோலிவுட்டில் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்தார். அதோடு இந்த படத்துக்காக தேசிய விருதும் பெற்றார்.
பின்னர், சிம்பு நடிப்பில் புதிய படம் இயக்கும் வாய்ப்பு ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு கிடைத்தது. இவர்களுடைய கூட்டணியில் ‘எஸ்டிஆர் 49’ உருவாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சிம்பு அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘அரசன்’ படத்தில் இணைந்த காரணத்தால், ராம்குமார் பாலகிருஷ்ணன் படம் தள்ளிப் போயுள்ளது.
இந்நிலையில் ‘எஸ்டிஆர் 49’ படத்துக்காக உருவாக்கப்பட்ட கதையானது, ரஜினிக்காக வேற லெவலில் மாற்றம் பெற்றுள்ளதாகவும், ரஜினியும் இக்கதையில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ‘தலைவர்-173’ படத்தின் இயக்குநர் யாரென்பது டிசம்பரில் வரும் ரஜினியின் பிறந்த நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.!