‘காந்தா’ படத்துக்கு தடை கோரிய வழக்கு அடிப்படை ஆதாரமற்றது: ராணா பேச்சு..

துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீ போர்ஸ், ராணா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘காந்தா’ திரைப்படம் நாளை 14-ந்தேதி வெளியாகவுள்ளது. இப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இப்படம் தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவுக்கு நவம்பர் 18-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தயாரிப்பு நிறுவனங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே எக்ஸ் தளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் ராணா. ‘காந்தா’ படத்தில் நடித்தது மட்டுமன்றி துல்கர் சல்மான் உடன் இணைந்து தயாரித்தும் இருக்கிறார் ராணா. அப்போது, காந்தா’ படத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்து இருக்கிறார்களே. அது குறித்து உங்கள் கருத்து’ என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக ராணா, ‘அது அடிப்படை ஆதாரமற்றது. இப்படத்தில் உண்மையான விஷயங்கள் எதுவுமே கிடையாது. நவம்பர் 14-ம் தேதி திரையரங்கில் படத்தைப் பாருங்கள்’ என தெரிவித்துள்ளார். இதன் மூலம் அப்படம் எம்.கே.தியாகராஜ பாகவதர் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது அல்ல என்பது உறுதியாகிறது.

இதனிடையே, இப்படத்தினை சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு திரையிட்டு காட்டினார்கள். அதிலிருந்து படத்துக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதனால் இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு உயரத் தொடங்கி இருக்கிறது.

case filed against the film kaantha rana responds
actor dulquer salmaankaantha moviestoryதுல்கர் சல்மான்ராணா