அரசியல் பேசும் படமாக உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ ஷுட் விரைவில் நிறைவடைகிறது. இது பற்றிய தகவல்கள் காண்போம்..
1992-ம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான ‘நாளைய தீர்ப்பு’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் விஜய். பின்னர், விகரமன் இயக்கத்தில் வெளியான ‘பூவே உனக்காக’ படத்தில் தனித்த முத்திரை பதித்தார்.
தற்போது ‘ஜன நாயகன்’ என் கடைசிப் படம் என அறிவித்து, தமிழக வெற்றிக் கழகம் கட்சியையும் தொடங்கி, மிகப்பெரிய மாநாட்டையும் சிறப்பாக நடத்திக் காட்டியுள்ளார்.
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘ஜனநாயகன்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் நிறைவடைய உள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் அல்ல என்பதையும் படக்குழு தெளிவுபடுத்தியுள்ளது.
முன்னதாக, பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, பிரியமானவளே, துள்ளாத மனமும் துள்ளும், திருமலை, கில்லி, திருப்பாச்சி, சிவகாசி, துப்பாக்கி, கத்தி, தெறி, மெர்சல், பிகில், மாஸ்டர், லியோ, கோட் என ஏகப்பட்ட பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்துள்ள விஜய் அரசியலுக்காக ‘ஜன நாயகன்’ படத்துக்குப் பிறகு நடிக்க மாட்டேன் என்கிற முடிவை எடுத்திருக்கிறார்.
இந்நிலையில், ஜன நாயகன் படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கை திருவிழாவாக நடத்தி மறக்க முடியாத செண்ட் ஆஃபை விஜய்க்கு கொடுக்க எச். வினோத் மற்றும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருந்தது.
இது பற்றி அறிந்த விஜய் ‘அதெல்லாம் வேண்டாம்ப்பா’ என்றும் ‘இன்னும் 4 நாள் எக்ஸ்ட்ரா கால்ஷீட் கேட்டா கூட நடிச்சித் தரேன், இப்படியெல்லாம் பண்ணாதீங்க’ என சொல்லிவிட்டார் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.