ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்-2’ படத்தில் பாலகிருஷ்ணா நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. சில காரணங்களால், தற்போது பாலகிருஷ்ணாவுக்கு பதிலாக விஜய் சேதுபதி இணைந்துள்ளார்.
இதற்கிடையில், பாலகிருஷ்ணா நடிப்பில் போயபட்டி ஸ்ரீனு எழுதி இயக்கியுள்ள ‘அகண்டா-2’ படம் வெளியாகவுள்ளது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆதி, ஹர்ஷாலி மல்ஹோத்ர கபிர் துஹார் சிங் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற டிசம்பர் 5-ந்தேதி முதல் உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் ‘அகண்டா-2’ படம் குறித்து இயக்குநர் போயபட்டி ஸ்ரீனு தெரிவிக்கையில், ‘2021-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததுடன், வசூலிலும் சாதனை படைத்த ‘அகண்டா’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘அகண்டா-2’ தயாராகி இருக்கிறது. வழக்கம் போலவே இந்த படத்திலும் பாலகிருஷ்ணா மாஸ் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
முதல் பாகத்தைப் போலவே ரசிகர்கள் விரும்பும்பும் அத்தனை அம்சங்களும் கொண்ட அட்டகாசமான படமாக இது தயாராகிறது. ஆன்மிகமும், அதிரடியும் கலந்த இப்படத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்து படைப்பது உறுதி. அதேபோல சம்யுக்தா மேனன் உள்பட நடிகர் -நடிகைகள் அத்தனை பேரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ராம்ப்ரசாத் ஒளிப்பதிவில், தமனின் இசையில் படம்
எதிர்பார்த்ததை விட சிறப்பாகவே தயாராகி இருக்கிறது.
முதல் பாகம் தெலுங்கு தாண்டி இதர மொழிகளிலும் பெரும் வரவேற்பை பெற்றது. அதேபோல இந்த பாகமும் இந்திய அளவில் மிகப்பெரிய சாதனை படைக்கும் என்று உறுதியாக நம்புகிறோம். மொழியை கடந்து நல்ல படங்களுக்கு ரசிகர்கள் அங்கீகாரம் தர தவறியது கிடையாது. அது இந்த படத்திலும் நிச்சயம் எதிரொலிக்கும் என்று நம்புகிறோம்.
‘அகண்டா-2′ படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கிடையே வருகிற டிசம்பர் 5-ந்தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. நிச்சயம் இந்த ஆண்டு இறுதியில் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் படமாக இது அமையும் என்பது உறுதி’ என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.