கின்னஸ் சாதனை படைத்த நடிகை திவ்யா உன்னி; எப்படி தெரியுமா?
பரத நாட்டியத்தில், மலையாள நடிகை திவ்யா உன்னி கின்னஸ் சாதனை படைத்த விவரம் காண்போம்.. வாங்க..
தமிழ் சினிமாவில் கண்ணன் வருவான், சபாஷ், பாளையத்து அம்மன், வேதம், ஆண்டான் அடிமை உட்பட பல படங்களில் நடித்துள்ள திவ்யா உன்னி தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். அங்கு நடனம் கற்றுக் கொடுக்கிறார்.
இந்நிலையில், அவர் தலைமையில் 11,600 நடனக் கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதற்கு முன் 10,176 நடனக் கலைஞர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியே சாதனையாக இருந்தது.
கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் பிரம்மாண்டமாய் நிகழ்ந்த இந்நடன நிகழ்ச்சியில், அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து 550 நடன ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். இவர்கள் ஒரே மாதிரி உடையணிந்து 8 நிமிடப் பாடல் ஒன்றுக்கு நடனமாடியது அனைவரையும் விழி விரிய வைத்தது.
இவரது வாழ்க்கைப் பயணத்தில், சுதிர்சேகரன் என்பவரை 2002-ம் ஆண்டு திருமணம் செய்தார். பின்னர், 2017-ம் ஆண்டு விவாகரத்து பெற்று, அமெரிக்காவில் வசிக்கும் அருண்குமார் என்பவரை 2018 -ல் மறுமணம் செய்துகொண்டார்.
தற்போது திவ்யா உன்னி, மீண்டும் நடிக்க தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் ‘சினிமாவோடு இருந்த தொடர்பை விடவே இல்லை. என்றும் எனது கலையார்வத்துக்கு வரும் தடையை விரும்புவதில்லை.
இப்போதும் ரிலீஸாகும் ஒவ்வொரு படங்களையும் தொடர்ந்து பார்க்கிறேன். சில பொறுப்புகள் காரணமாக, இடையில் நடிப்பைக் கைவிட வேண்டியதாகி விட்டது. சரியான நேரம் வந்து விட்டது. மீண்டும் நடிக்க ஆர்வமாய் இருக்கிறேன்’ என்றார்.