பிரபல ஓடிடி தளத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானதால் இரவின் நிழல் திரைப்படம் வெளியாக தாமதமாகுவதாக நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

‘ஒத்த செருப்பு’ படத்திற்கு பிறகு பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் படம் தான் “இரவின் நிழல்”. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், பிரிகடா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை புதிய முயற்சியாக 94 நிமிடம் 36 நொடிகளில் ஒரே ஷாட்டில் படமாக்கி உள்ளனர். குறிப்பாக உலகிலேயே Non Linear முறையில் படமாக்கப்பட்ட முதல் சிங்கிள் ஷாட் திரைப்படம் இந்த இரவின் நிழல்.

இதனால் அதிக ஆர்வத்தோடு இருந்த ரசிகர்களுக்கு இப்படம் பெரும் விருந்தாக அமைந்திருந்தது. ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி பல விருதுகளையும் பெற்று இப்படம் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இப்படம் பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகும் என்ற தகவலை நடிகர் பார்த்திபன் சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார். இருப்பினும் இதுவரை இப்படம் வரவில்லை. இதனால் பார்த்திபன் வருத்தத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், “இன்று முதல் பொன்னியின் செல்வன். ஆகவே வரும் வாரம் வருமாம் “இரவின் நிழல்” செய்தி. பெரு மழையில் தேங்கி விடுகிறது சிறு தொழில் செய்வோரின் வியாபாரம். அன்றைய உணவுக்கு அன்றன்று உழைக்கும் மக்கள் நிலையே கவலைக் கிடம். இடர்காலங்களில் ஒருவருக்கொருவர் கடுகு அளவு உதவுவதும் பெருங்கொடை, குடையாக விரியும் அரசின்உதவிகள். அடுத்த சீசனில் மழைக்கும் முன்பு இடும் கூடுதல் திட்டமிடலால் மக்கள் நலம் கூடும். மழை சாரல் பட சூடான தேனீரோடு துவங்குவோம் இந்நாளை” என்று தெரிவித்துள்ளார். அதாவது பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானதால் இரவின் நிழல் திரைப்படம் வெளியாக தாமதமாகி இருப்பதாக நடிகர் பார்த்திபன் தனது வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார்.