‘ஜெயிலர்-2’ படத்தில் ரஜினியுடன் இணைகிறார் மோகன்லால்
ரஜினியின் ‘ஜெயிலர்-2’ பட தகவல்கள் பார்ப்போம்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ரஜினியின் அடுத்த படமாக நெல்சன் இயக்கத்தில், ஜெயிலர் 2-ம் பாகம் உருவாகி வருகிறது. முன்னதாக வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியுடன் இணைந்து வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார். இப்படம் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது.
இந்த வெற்றியை தொடர்ந்து உருவாகும் ‘ஜெயிலர் 2’ படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் என கூறப்படுகிறது. தற்போது சென்னையில் ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மோகன்லால், சிவராஜ் குமார் ஆகியோரின் கேமியோக்கள், ஜெயிலர் திரைப்படத்தை கூடுதல் ஸ்பெஷலாக மாற்றியது. எனவே ‘ஜெயிலர் 2’ திரைப்படத்திலும் இவர்கள் முக்கியமான கேரக்டர்களில் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
இந்நிலையில், இப்படம் குறித்து மோகன்லால் தெரிவிக்கையில், ‘நிறைய தமிழ் படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், நான் ‘எம்புரான்’ போன்ற படங்களில் பிஸியாக இருந்ததால் அது நடக்கவில்லை.
இப்பொழுது ‘ஜெயிலர் 2′ ஆரம்பித்து விட்டது. அவர்கள் என்னை அழைத்தால் நான் போவேன்’ என கூறியுள்ளார். இதன்மூலம் ‘ஜெயிலர் 2′ படத்தில் தான் நடிப்பதற்கு ஆர்வமாக இருப்பதை உறுதி செய்துள்ளார். விரைவில், இப்படத்தில் ரஜினியுடன் இணைவார்’ என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.