பிரபு, விஜய் வர்மா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

பிரம்மாண்ட திரைப்படங்களை தயாரித்து, வெற்றிகரமாக விநியோகித்து வரும் தயாரிப்பாளர் ராகுலின் Romeo Pictures நிறுவனம், Aviate Pictures நிறுவனத்தின் கோகுல் ஸ்ரீனிவாசனுடன் இணைந்து புதிய திரைப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே தொடங்கியுள்ளது.
‘ரைட்டர்’ படத்தை இயக்கியவரும், ‘DC’ படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இப்படத்தை இயக்குகிறார். இளைய திலகம் பிரபு மற்றும் விஜய் வர்மா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஷிவாத்மிகா ராஜசேகர் கதாநாயகியாக நடிக்க, Romeo Pictures ராகுலும் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார்.
டார்க் ஹியூமர் பின்னணியில், திரில்லர் மற்றும் காமெடி அம்சங்கள் கலந்த வித்தியாசமான கதைக்களத்தில் இப்படம் உருவாகவுள்ளது.
படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாளிலேயே நடிகர் விக்ரம் பிரபு மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் படப்பிடிப்புத் தளத்திற்கு நேரில் சென்று படக்குழுவினரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அவர்களின் வருகை படக்குழுவினருக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்தது.

மேலும், முத்துக்குமார், ரமேஷ் திலக், திலீப் சுப்பராயன், தீனா, அருண் மாதேஸ்வரன், கவிதா பாரதி, அவினாஷ் ரகுதேவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள, பிரசன்னா G.K படத்தொகுப்பை கவனிக்கிறார். P.C. ஸ்டன்ட்ஸ் சண்டைப் பயிற்சியையும், யுகபாரதி பாடல் வரிகளையும் கவனிக்கின்றனர். நவ்ஷாத் அகமது ஆடை வடிவமைப்பையும், சக்தி வெங்கட்ராஜ் M கலை இயக்கத்தையும் மேற்கொள்கின்றனர்.
அனுபவம் வாய்ந்த நடிகர் பிரபுவுடன் இளம் தலைமுறை நட்சத்திரங்கள் இணைந்துள்ளதால், இப்படம் ரசிகர்களுக்கு புதுமையான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் தலைப்பு மற்றும் இதர முக்கிய தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளன.
