நல்லமுறையில் வரி செலுத்துவோருக்கு அரசின் சலுகைகள்: விஜய் சேதுபதி கோரிக்கை..

Web Ads

ரொம்ப நாளாக தன் மனதில் இருந்த கோரிக்கையை விஜய் சேதுபதி வெளிப்படுத்தியுள்ள நிகழ்வு இதோ..

மதுரையில் வருமான வரித்துறை சார்பில், வரி செலுத்துவோர் மைய தொடக்க விழா தமுக்கம் மைதான மாநாட்டு அரங்கில் நடைபெற்றது. இதற்கு புதுடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய உறுப்பினர் ஹெச்.பி.எஸ்.கில் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இவ்விழாவில் நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:

‘நானும் படிப்பை முடித்துவிட்டு சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்டிடம் 6 மாதம் வேலை பார்த்து பெரிய நிறுவனங்களில் தணிக்கைக்கு சென்றுள்ளேன். அரசு விஷயங்களை தெரிந்து கொள்ளவே சிரமமாக இருக்கும். ஆனால், வருமான வரித்துறை சார்பில் இணையதளத்தில் எளிதாக தெரிந்து கொள்ள முடிகிறது.

இங்கு குழந்தைகளுக்கும் புரியும் வகையில் கார்ட்டூன் வடிவில் காட்சிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. பான் கார்டு விண்ணப்பிக்க இந்தியிலும், ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது. தமிழிலும் இருந்தால் நன்றாக இருக்கும்.

நமது உரிமைக்காக அரசிடம் எந்தளவுக்கு கோரிக்கை வைக்கிறோமோ, அந்தளவுக்கு வரி செலுத்துவதும் அவசியம். அது நமது கடமை என நம்புகிறேன். ரொம்ப நாளாக என் மனதில் ஒரு கோரிக்கை உள்ளது.

ஒரு காலத்தில் நன்றாக சம்பாதித்து வரி செலுத்தியிருப் போம். ஒரு கட்டத்தில் செலுத்த முடியாத நிலை உருவாகும். எனவே, நல்ல முறையில் வரி செலுத்திய குடிமகன்களுக்கு ஏதாவது சலுகைகள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சியை தொடங்கியது மிக்க மகிழ்ச்சி’ என பேசினார்.

இதில் பல்வேறு கருத்தரங்குகள், விநாடி- வினா நிகழ்ச்சியும் நடந்தன. பட்டயக் கணக்காளர்கள் சங்கங்கள், வர்த்தக சங்கத்தினர் தொழில் முனைவோர் கலந்து கொண்டனர். இன்றும் நாளையும் காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரை வரி செலுத்துவோர் மையம் செயல்படும்.

vijay sethupathi says provide benefits to regular tax payers