தேர்தல் நேரத்தில் ‘ஜனநாயகன்’ படத்திற்கு பாதிப்பு நேருமோ?: விஜய் எடுத்த அதிரடி முடிவு
‘ஜனநாயகன்’ படத்தின் விநியோக உரிமை பற்றிப் பார்ப்போம்..
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ ஷுட் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் எடுத்து முடிக்கப்பட்டு விட்டது.
மற்ற நடிகர்களை வைத்து சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 8-ந்தேதி வெளியாகவுள்ள இப்படத்தினை கே.வி.என் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இதன் ஓடிடி உரிமையினை அமேசான் ப்ரைம், தொலைக்காட்சி உரிமையினை சன் டிவியும் பெற்றுள்ளது.
தற்போது இதர விநியோக உரிமைகள் வியாபாரத்தினை தொடங்க முடிவு செய்தது தயாரிப்பு நிறுவனம். இது தொடர்பாக சில முடிவுகளை தயாரிப்பு நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார் விஜய். ஜனநாயகன்’ விநியோக உரிமையினை பெறுகின்ற எந்தவொரு நிறுவனத்துக்கும் எந்தவொரு அரசியல் பின்புலமும் இருக்கக் கூடாது என தெரிவித்திருக்கிறார்.
இதனால், தமிழக உரிமையினை பெறுவதற்கு முன்னணியில் இருந்த ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது பின்வாங்கி இருக்கிறது. தமிழக உரிமையினை லலித்குமாரிடம் கொடுக்கப்படும் என கூறப்படுகிறது.
அவ்வாறு இல்லாத பட்சத்தில் கலைப்புலி எஸ்.தாணுவிடம் கொடுப்பதற்கும் படக்குழு தயாராக இருக்கிறது. தமிழக உரிமை மட்டுமன்றி, இதர மாநில உரிமைகளும் இதே பாணியில் தான் கொடுக்கப்பட இருக்கிறது.
அரசியல் பேசும் படம்தான் ‘ஜனநாயகன்’. இதன் விநியோக உரிமையை பெறுபவர் அரசியல் பின்னணியுடன் இருந்தால், தேர்தல் நேரத்தில் படத்தின் வெற்றியை பாதிக்க நேரலாம் என்ற தொலைநோக்கு பார்வையுடனும் விஜய் எடுத்துள்ள அதிரடி முடிவை அவரது ரசிகர்களும் தொண்டர்களும் வரவேற்றுள்ளனர்.