Stalin Press Release
Stalin Press Release

Stalin Press Release – சென்னை: வரும் மார்ச் 1 ஆம் தேதி தனது பிறந்த நாளை யாரும் கொண்டாட வேண்டாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியதாவது: திமுக மற்றும் காங்கிரஸ் தொகுதி உடன்பாடு ஏற்பட்ட பிறகு, செய்தியாளர்களுடனான சந்திப்பின்போது, உங்கள் பிறந்தநாளில் திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகுமா? எனக் கேட்டார்கள்.

அப்போதே நான், ‘என் பிறந்தநாளைக் கொண்டாடும் மன உணர்வில் நான் இல்லை’ என்பதைத் தெரிவித்தேன் என்று அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் மார்ச் 1 ஆம் தேதி என்னுடைய பிறந்தநாள் என்றபோதும், தலைவர் கருணாநிதி நம்முடன் இல்லாத நிலையில், பிறந்தநாளைக் கொண்டாடுவதில்லை எண்ணம் தோன்றியது.

ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் , முதல் நிகழ்வாக, தலைவரும் என் தந்தையுமான கலைஞர் அவர்களிடமும், அன்னையார் தயாளு அம்மையாரிடமும் தாள் வணங்கி வாழ்த்துப் பெறுவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு தலைவரின் வாழ்த்துகளை நேரில் பெற முடியாதபடி, இயற்கையின் சதி அமைந்துவிட்ட நிலையில், பிறந்தநாள் நிகழ்ச்சிகள் அவசியமற்றவை என்பதே என் முடிவு.

வழக்கமாக மார்ச் 1 அன்று நேரில் சந்தித்து வாழ்த்தும் கழகத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், சிற்றூர், துணை அமைப்புகளின் நிர்வாகிகள், இந்த முறை அதனைத் தவிர்க்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

மேலும் பிறந்தநாள் விழா எனும் பெயரில் ஆடம்பர விழாக்களை நடத்துவதைக் கைவிட்டு, ஏழை – எளிய மக்கள் பயன்பெறும் வகையிலான நலத்திட்ட உதவிகளை இயன்றவரை வழங்கிட வேண்டுகிறேன் என்று கேட்டு கொண்டார்.

இவ்வாறு ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.