அப்பாவின் குரலை ஏ.ஐ. செய்ய அனுமதிக்க முடியாது: எஸ்.பி.பி.சரண் உறுதி

சயின்ஸ் டெவலப்மென்ட் சினிமாவில் புகுந்து, செமையாய் கம்பு சுற்றுகிறது. குறிப்பாக ஏ.ஐ. தொழில் நுட்பம் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், மறைந்த பிரபலங்கள் நடித்துள்ளதைப்போல், பாடியுள்ளதைப்போல், பேசியுள்ளதைப்போல் பல படங்களில் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
கடைசியாக வெளியான ‘வேட்டையன்’ படத்தில் கூட மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன் பாடியிருப்பதைப்போல் ‘மனசிலாயோ..’ பாடல் அமைந்திருக்கும்.
இந்நிலையில், ஏ.ஐ தொழில்நுட்பம் குறித்து மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியனின் மகன் எஸ்.பி.பி.சரண் தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் வாயிலாக வெளிவரும் படைப்பானது, ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையிலும், மறைந்த கலைஞர்கள் மீது இருக்கக்கூடிய அதிக அன்பினாலும் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
அவ்வகையில், விஜய் நடிப்பில் வெளியான ‘கோட் ‘படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் நடித்துள்ளதைப் போல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. மறைந்த பாடகி பவதாரிணி பாடியுள்ளதைப் போல் ஒரு பாடலும் இடம் பெற்றது.
தமிழ் சினிமாவில் முதல் முதலில் ஏ.ஐ. தொழில் நுட்பத்தின் மூலம், ஒரு பாடகர் பாடியுள்ளதைப் போல உருவாக்கப்பட்ட பாடல், பாக்யா குரலில் ‘லால் சலாம்’ படத்தில் இடம் பெற்ற பாடல்தான்.
பின்னர், கோட் மற்றும் வேட்டையன் படங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மறைந்தும் மறையாத பாடகர் ‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசப்பிரமணியம் மகனும் பாடகருமான எஸ்.பி.பி.சரண் தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
அதாவது, ஏ.ஐ. வந்த பின்னர் யாரு வேண்டுமானாலும், யார் இசையில் வேண்டுமானாலும், எந்த மாதிரியான பாடலை வேண்டுமானாலும் பாடலாம் என்ற நிலை வந்துவிட்டது. இறந்து போனவர்கள் மீது இருக்கும் அன்பினால் இதைச் செய்கின்றோம். எடுத்துக்காட்டுக்காக கூறுகின்றேன், யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் இல்லை.
‘வேட்டையன்’ படத்தில் மனசிலாயோ பாடலை அப்பா பாட வாய்ப்பு வந்திருந்தால், ஒருவேளை அவர் அதனை மறுத்திருக்கலாம். ஆனால் ஏ.ஐ. வந்த பின்னர், நாம் இப்படியான வாய்ப்பினை பாடகருக்கு கொடுக்க மறுக்கின்றோம்.
அதேபோல், வாசுதேவன் சார் முன்பு பாடிய பாடல்கள் காலத்தால் அழிக்க முடியாதவையாக மாற காரணமே, உணர்வுகளோடு பாடியதுதான். ஏ.ஐ. மூலம் குரலைத்தான் ரீ-கிரியேட் செய்ய முடியும், உணர்வுகளைக் கொண்டு வர முடியாது.
அப்பாவின் குரலை ஏ.ஐ. செய்து கொள்கின்றோம் என கேட்டு பலர் வருகின்றனர். ஆனால், நான் அனைவருக்கும் முடியாது எனச் சொல்லி விடுகின்றேன்’ என கூறியுள்ளார். இவரது கருத்தும் சரிதான் என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஆம்.. சினிமாவை வியாபாரமாக்க எத்தனையோ யுக்தி உண்டு. அதில், மறைந்த பிரபலங்களும் கண்ணியமாய் பயன்படுத்தப்படுகிறார்களோ என்றே கருத்து நிலவுகிறது.
