பணத்தை இழந்த ஏழை பெண்ணுக்கு, ராகவா லாரன்ஸ் ரூ.1 லட்சம் உதவி..
மனிதநேயத்துடன் ராகவா லாரன்ஸ் நிதிஉதவி வழங்கியுள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்..
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே கிளாதரி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்கருப்பி. இவர் கூலி வேலை பார்த்து அதில் கிடைக்கும் பணத்தை 500 ரூபாயாக மாற்றி சேர்த்து வைத்துள்ளார்.
இப்படி சேர்த்த ரூ.1 லட்சம் பணத்தை தகர உண்டியலில் சேர்த்து மண்ணுக்குள் புதைத்து வைத்துள்ளார். மகளுக்கு காதணி விழா நடத்த உண்டியலை எடுத்தபோது, கரையான் அரித்துவிட்டது. அவருக்கு ராகவா லாரன்ஸ் ரூ.1 லட்சம் பணம் கொடுத்து உதவியுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள ராகவா லாரன்ஸ், ‘கிராமத்தில் கூலி வேலை செய்த குடும்பம், அதன் மூலம் கிடைத்த பணத்தை சேகரித்து மண்ணில் புதைத்து வைத்துள்ளனர். மகளுக்கான நிகழ்ச்சிக்காக பணத்தை எடுக்கும்போது, அந்த பணத்தை கரையான் அரித்துவிட்டது.
அதனால், அவர்களது பணத்தை அதே பாக்ஸில் வைத்து திருப்பி தரலாம் என முடிவு செய்தேன். அதனால், அவர்களை வர வைத்துள்ளேன். ராகவேந்திரா சிலை அருகே வைத்து விடுகிறேன். அவர்கள் வந்து பார்த்து சந்தோஷப்படட்டும், இதை நான் கொடுக்கவில்லை ராகவேந்திரா தானே கொடுக்கிறார்’ என்று பேசியுள்ளார்.
அதேபோல பணத்தை அந்த குடும்பத்திடம் ஒப்படைக்கிறார் ராகவா லாரன்ஸ். அதை பெற்றுக்கொண்ட அந்த பெண்மணி, ‘கஷ்டப்பட்ட பணம் மண்ணாகிவிட்டது என்ற வருத்தம் எங்களுக்கு இருந்தது. எங்கள் உழைப்புக்கு ஏற்ற மரியாதையை செலுத்தி விட்டீர்கள். எங்கள் கண்ணீரை துடைத்த ராகவா லாரன்ஸ் என்றென்றும் நன்றாக இருக்கட்டும்’ என்றார்.
