Jacto Geo Strike
Jacto Geo Strike

Jacto Geo Strike – சென்னை:அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதிக்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ வலியுறுத்தி வருகிறது.

தங்களது கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை என்று கூறி,பலமுறை போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளது.

இந்நிலையில், கைவிடப்பட்ட வேலைநிறுத்த போராட்டத்தை இன்று (22.01.19) முதல் தொடங்க இருப்பதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அறிவித்து உள்ளனர்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்று வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி இருக்கும் நிலையில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அனைத்து துறை செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது, ‘மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத சங்கங்கள், 22-ந் தேதியில் இருந்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளனர்.

இந்நிலையில், வேலைநிறுத்த போராட்டம், போராட்டங்களில் அரசு ஊழியர்கள் பங்கேற்பது, ஆர்ப்பாட்டம் அல்லது எந்த விதத்திலுமான கிளர்ச்சியில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களின்,

இயல்பு செயல்பாட்டை பாதிக்கச் செய்வது ஆகியவை தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஒழுங்கு விதிகளின் 20, 22 மற்றும் 22ஏ ஆகிய பிரிவுகளை மீறுவதாகும்.

எனவே, தமிழக அரசு ஊழியர்கள் ஒழுங்கு விதிகளை மீறக்கூடாது என்று ஒவ்வொரு துறையின் ஊழியர்களுக்கும் அறிவுரை வழங்க வேண்டும்.

அரசு ஊழியர் யாராவது அலுவலகத்துக்கு வரவில்லை என்றால், அவர்கள் 22-ந் தேதி (இன்று) நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தால், அவர்கள் எடுத்துக்கொண்ட விடுமுறை காலம் அங்கீகாரமற்றது என்று கருதி,

அந்த காலகட்டத்திற்காக சம்பளம் மற்றும் சலுகைகள் ஆகியவை ‘பணியில்லை, ஊதியமும் இல்லை’ என்ற கொள்கையின் அடிப்படையில் அவர்களுக்கு சம்பளம் வழங்கக்கூடாது’ இவ்வாறு தெரிவித்திருந்தார்.