பிரபல சினிமா தயாரிப்பாளர் வீட்டில் அமலாத்துறை சோதனை
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இது பற்றிய தகவல்கள் காண்போம்..
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், சினிமா துறையில் தனது பயணத்தை உதவி இயக்குனராக தொடங்கியவர். தனுஷ் தயாரித்த ‘நானும் ரவுடிதான்’ படத்தில் விக்னேஷ் சிவனுக்கு உதவியாளராக பணியாற்றியதில் இருந்து அவரது திரைப்பயணம் தொடங்கியது. பின்னர், ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, ‘பாவ கதைகள்’, ‘அமரன்’ போன்ற படங்களில் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணியாற்றினார்.
தற்போது ‘டான் பிக்சர்ஸ்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார் ஆகாஷ். தனுஷின் ‘இட்லி கடை’, சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ உள்ளிட்ட படங்களை தயாரித்து வருகிறார். மேலும் அதர்வா – கயாடு லோஹர் நடிக்கும் ‘இதயம் முரளி’, சிம்பு நடிக்கும் 49-வது படம் என தயாரித்து வருகிறார்.
இந்நிலையில், முன்னணி தயாரிப்பாளராக வளர்ந்து வரும் ஆகாஷ் பாஸ்கரனின் வீட்டில் 2 நாட்களாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை தேனாம்பேட்டை, கேபி தாசன் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலை 6.15 மணி முதல் 7.30 மணி வரை சோதனை நடைபெற்றது. சோதனையில் பயன்படுத்தப்பட்ட வாகனத்தின் பதிவு எண் PY-01 DC-1951 என குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், சோதனை எதற்காக நடத்தப்பட்டது, எந்த வகையில் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறித்த அதிகாரபூர்வ ஆவணம் வெளியாகவில்லை.