அனைத்து பள்ளிகளிலும் ஒரே கொள்கை இருக்க வேண்டும்: இயக்குனர் பேரரசு வலியுறுத்தல்
நாட்டில் ‘சமதர்மம்’ ஏற்பட வேண்டும் என பேரரசு பேசியுள்ளார். இது பற்றிய விவரம் காண்போம்..
’தெய்வத்திருமகள்’, ’மதராசப்பட்டினம்’, ’சைவம்’ படங்களின் இயக்குனரான ஏ.எல். விஜய் டி ஸ்டுடியோ போஸ்ட் (D Studios Post) என்ற பெயரில் புதிய போஸ்ட் புரொடக்சன் ஸ்டுடியோ தொடங்கியுள்ளார். இதன் திறப்பு விழாவில் திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் பேரரசு செய்தியாளர்களை சந்தித்து, தற்போது பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் மும்மொழிக் கொள்கை பற்றியும் கருத்து தெரிவித்தார். அவர் பேசியதாவது:
‘தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தமிழ் பாடத்தை கட்டாயமாக வேண்டும். இந்தி படிக்கட்டும். படிக்காமல் போகட்டும் அது அவர் அவர்களுடைய விருப்பம்.
இன்றைக்கு 40 சதவீதம் தமிழ் மாணவர்களுக்கு.. தமிழ் பேசுகிறார்களே தவிர எழுதவோ படிக்கவோ தெரியவில்லை. ஹிந்தி வந்தால், தமிழ் அழிந்துவிடும் என்று கூறுகிறார்கள். ஆனால், ஏற்கனவே தமிழ் அழிந்து கொண்டுதான் வருகிறது.
தனியார் மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகளில் விருப்ப மொழிகள் ஹிந்தி, கன்னடம், மலையாளம் போன்ற வேற்று மொழிகள் இருக்கிறது. ஆனால், தனியார் பள்ளிகளில் தமிழ்மொழி விருப்ப மொழியாக இருப்பது மிகவும் வேதனையாக உள்ளது.
சமூகநீதி, சமதர்மம் என்று கூறுகிறார்கள். ஆனால் மாணவர்களையே தனியார் பள்ளி மாணவர்கள், அரசு பள்ளி மாணவர்கள் என்று பிரித்துப் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கை கூட இருக்கட்டும். ஆனால், தனியார் மற்றும் அரசு என அனைத்து பள்ளிகளிலும் ஒரே கொள்கை இருக்க வேண்டும். அது தான் சமதர்மம்.
நான் ஹிந்தி முக்கியம், முக்கியமில்லை என்ற விவாதத்திற்கு நான் வரவில்லை. எனக்கு தமிழ் முக்கியம்’ என கூறினார்.
