நடிகர் சூரியின் சகோதரர் மீது ஆட்சியரிடம் புகார்..
சூரியின் சகோதரர் மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விவரம் காண்போம்..
சூரியின் நடிப்பில் வெளியான ‘மாமன்’ திரைப்படம் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், அவர் சொந்தமாக மதுரை நரிமேடு பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார். இந்த உணவகத்தை அவரது சகோதரர் லட்சுமணன் கவனித்து வருகிறார்.
அதே பகுதியில் முத்துசாமி என்ற நபர் ‘அலைகள்’ என்கிற பெயரில் அச்சகம் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கும் அம்மன் உணவகத்தின் உரிமையாளரான சூரியின் சகோதரர் லட்சுமணனுக்கும் வாகனம் நிறுத்துவதில் தகராறு ஏற்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக முத்துசாமிக்கும், லட்சுமணனுக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால், இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதமும் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் லட்சுமணன் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முத்துசாமி புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில், ‘எனது கடைக்கு கீழ்புறம் வணிகம் செய்து வரும் நடிகர் சூரியின் சகோதரர் லட்சுமணன் என்பவர் எனது அலுவலகத்தின் பொதுநடை பாதையை ஆக்கிரமித்ததோடு, தான் அதை வாடகைக்கு எடுத்திருப்பதாக கூறி ஆக்கிரமிப்பை தொடர்ந்து எடுக்க மறுத்து வருகிறார்.
இது குறித்து தல்லாக்குளம் காவல் நிலையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். வீட்டு ஓனரிடம், ஆக்கிரமிப்பு எண்ணத்தோடு கூடுதல் பணம் தருகிறேன், மாடியில் இருப்பவரை காலி செய்து என்னிடம் கொடுங்கள் என்று எனக்கும் வீட்டு ஓனருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டார்.
மேலும், என் அனுமதி இல்லாமல் அத்துமீறி என் அலுவலகத்தின் பூட்டை உடைத்து எனது ஆவணங்களையும், சேமிப்பு பணத்தையும் பறிமுதல் செய்ததோடு, மாடிக்குச் செல்லும் பாதையையும் பூட்டி விட்டார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் முத்துசாமி மனு அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
‘நடிகர் சூரிக்கு தெரிந்து தான் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறதா? அல்லது அவரது பெயரை பயன்படுத்தி நடத்தப்படுகிறதா? என்பது தெரியவில்லை. அவர்களது தொழில் குறித்து நான் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை.
இது போன்ற அராஜக செயல்களில் ஈடுபடும் அவரது சகோதரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் புகார் அளித்ததாக கூறினார்.
